கருத்து சுதந்திரம்...
கடந்த மே, 26--&ம் தேதியை இந்திய திரைப்பட வரலாற்றில் சர்ச்சைக்குரிய நாளாகப் பார்க்கிறார்கள். பலத்த சர்ச்சைகளுக்குப் பிறகு இரண்டு சினிமாக்கள் அன்றைய தினத்தில்தான் இந்தியாவில் ரிலீஸாகி இருக்கின்றன. ஒன்று ‘தி டா வின்சி கோட்’ என்ற ஆங்கிலத் திரைப்படம். இன்னொன்று... அமீர்கானின் ‘ஃபனா’ என்ற இந்தித் திரைப்படம்.

‘தி டா வின்சி கோட்’ படத்தில் இயேசு கிறிஸ்துவுக்குத் திருமணம் நடந்து குடும்பஸ்தராக இருந்ததாகச் சித்திரிக்கப்படவேதான் சர்ச்சை. அதாவது கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகளுக்கு எதிராக இயேசு காட்டப்படுவதால், அவர்களது உணர்வுகள் இந்தக் காட்சியமைப்புகளால் காயப்படும் என்று சுட்டிக் காட்டப்பட்டது. ஆனால் ‘ஃபனா’ விஷயம் இதற்கு நேர்மாறானது. படம் தெரிவிக்கும் கருத்து சர்ச்சைக்குள்ளாகவில்லை. படத்தின் ஹீரோவே பிரச்னைக்குரியவராக மாற்றப்பட்டிருக்கிறார்.
‘குஜராத் மக்களின் உணர்வுகளுக்கு எதிராகப் பேசிய அமீர்கான், பகிரங்கமாக மன்னிப்புக் கேட்காவிட்டால், அவரது திரைப்படத்தை குஜராத் முழுவதும் திரையிட விடமாட்டோம்’ என்று சிலர் கொக்கரித்துக் கிளம்பி இருப்பது தான் விவகாரத்துக்கான காரணம். பி.ஜே.பி&யின் இளைஞர் அணியிடம் இருந்து வந்த இந்த அறைகூவலைக் கண்டு பயந்து, குஜராத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், ‘ஃபனா’வை வெளியிட மறுக்கிறது. எதிர்ப்பாளர்களின் அச்சுறுத்தலுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் அடிபணிந்ததன் மூலம் யுவ பாரதிய ஜனதாவின் சட்டாம்பிள்ளைத்தனத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.
அமீர்கானின் மீது குஜராத் பி.ஜே.பி&யினருக்கு அப்படி என்ன கோபம்?

நர்மதா அணையின் உயரத்தை அதிகரிப்பதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லி, அந்த மக்களுக்கு ஆதரவாக அமீர்கான் குரல் கொடுத்தார். பாதிக்கப்படும் மக்களுக்காகப் பட்டினிப் போர் நடத்திய மேதா பட்கருக்கு அமீர்கான் ஆதரவாகக் கருத்துச் சொன்னார்.
குஜராத் விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கு அணையின் உயரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நிலைப்பாடு. எனவே அமீர்கானின் கருத்து, மோடியின் கருத்துக்கு விரோதமான கருத்தாகக் கருதப்பட்டுவிட்டது.

அதுமட்டுமல்ல, அமீர்கான் இப்படி பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியதை எதிர்த்து முதலில் குஜராத் மாநிலத்தில் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டி விட் டதே காங்கிரஸ் இயக்கத்தினர்தான். காங்கிரஸ் கட்சியும் பி.ஜே.பி&யும் அரசியலில் இணைய முடியாத இரு துருவங் களாக மக்களிடம் தங்களைக் காட்டிக் கொண்டிருந்தாலும், அமீர்கான் விஷயத்தில் மட்டும் இரண்டு தரப்பும் ஒரே நிலைப் பாட்டை எடுத்திருக்கின்றன. இப்படிப்பட்ட அரசியல் விநோதங்கள் எப்பவாவது குஜராத்திலும் நடப்பதுண்டு.
மாநில நலன், சாதி, மதம், மொழி, இனம் போன்ற விஷ யங்கள் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் அணுகப்படும்போது, ஆழமான விவாதங்களை நடத்த இயலாது. பெரிய அணைத் திட்டங்களுக்கு மாற்றான நீர்ப்பாசன வசதிகள் குறித்தோ, பெருந்திட்டங்களால் பாதிக்கப்படும் சாதாரண மக்கள் வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான மாற்றுத் திட்டங் கள் குறித்தோ சாதரணமாக யாரும் கருத்துச் சொல்லிவிட முடியாது. அதிகாரம் படைத்தவர்களின் கருத்துக்கு மாற்றான விஷயங்களைப் பேசும் தனிநபர்களும், சிறு குழுக்களும் பல இடங்களில் கேலி செய்யப்படுவார்கள் அல்லது அச்சுறுத்தப்படுவார்கள்... அல்லது தாக்கப்படுவார்கள்! இது வாடிக்கையாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒரு தனிமனிதன், தனது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடலாம். இதைத்தான் இந்திய அரசியல் சட்டம் அடிப்படை உரிமையாக வழங்கியிருக்கிறது. ஆனாலும் ஒருவர் தனது கருத்தை வெளியிடும்போது அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் நடப்பது ஏன்? அரசாங்கமோ அல்லது ஒரு குழுவோ தனிநபரின் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்படும்போதெல்லாம் இதுபோன்ற கேள்விகளும் தவறாமல் எழுகின்றன.
ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்திலேயே கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான செயல்கள் நடந்திருக்கின்றன. ஏ.டி.கோர்வாலா என்பவர், விவேக் என்ற புனைப்பெயரில் நேருவின் ஆட்சியை விமர்சனம் செய்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளிதழில் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தார். நேருவின் ‘அறிவுறுத்தலு’க்குப் பிறகு அவரிடம் இருந்து கட்டுரை வாங்கிப் போடுவதை நிறுத்திவிட்டது அந்த நாளிதழ். இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட மற்ற பத்திரிகைகளும் குறிப்பிட்ட அந்தக் கட்டுரையாளரின் கட்டுரைகளை வாங்கிப் பிரசுரிப்பதை நிறுத்திக் கொண்டு விட்டன. அவரை எழுத அழைத்தால் நேருவின் மனம் வருத்தமடையும் என்று அவர்கள் நினைத்ததாலேயே இப்படி செய்தார்கள். ‘நமக்கு இனிமேல் யாரும் எழுத வாய்ப்பளிக்க மாட்டார்கள்...’ என்பதைப் புரிந்துகொண்ட கோர்வாலா, தானே ஒரு வாரப் பத்திரிகையைத் தொடங்கி விட்டார். அந்தப் பத்திரிகைக்குப் பெரிய அளவில் சர்குலேஷன் இல்லை. இருந்தாலும், வேறு வழியின்றி தனது கருத்துக்களை அதில் எழுதி வந்தார். அப்படித்தான் அவரால் செய்ய முடிந்ததே தவிர, அதிகாரம் படைத்தவர்களை எதிர்த்து நியாயமான கருத்துக்களைக்கூட அவரால் தைரியமாகச் சொல்ல முடியவில்லை.
இப்படி மறைமுகமாகத் தொடங்கிய தணிக்கை, நெருக்கடிநிலை காலத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. அதன்பிறகு வந்த காலகட்டங்களில் அச்சுறுத்தல்கள் வேறுவித மாக மாறின. படித்துப் பார்க்காமலேயே புத்தகங்கள் தடைசெய்யப்பட்டன. சல்மான் ருஷ்டி எழுதிய ‘சாத்தானிக் வெர்சஸ்’ என்ற நூல், இஸ்லாமிய நாடுகளில் தடைசெய்யப்படுவதற்கு முன்னரே இந்தியா வில் தடை செய்யப்பட்டது. டெல்லி வீதியில் சப்தர் ஹாஸ்மி என்ற நாடகக் கலைஞர் கொல்லப் பட்டார். எம்.எப்.ஹ§சேனின் ஓவியங்கள் நாசப்படுத்தப்பட்டன. பிரதீப் தால்வியின் ‘கோட்சே’ நாடகத்தைத் திரையிட முடியவில்லை. தீபா மேத்தாவால் அவரது ‘வாட்டர்’ திரைப்படத்துக்கான படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. அழுகிய முட்டைகளும் தக்காளிகளும் பிடித்திருந்த இடத்துக்குப் போட்டியாக செருப்புகளும் துடைப்பங்களும் புதிதாக முளைத்தன. இவை எல்லாவற்றுக்கும் காரணம், அரசியல் சக்திகள் சகிப்புத் தன்மை இல்லாமல் பிரச்னைகளை பூதாகரப்படுத்தி அச்சுறுத்தும் நிலைக்கு மாறியதால்தான்!
வன்முறைப் பாதைக்குத் தெரிந்ததெல்லாம் தங்கள் கருத்துக்களுக்கு விரோதமான குரல்கள் கேட்டுவிடக் கூடாது என்பதுதான். அந்த ஆதிக்க சிந்தனை அதிகமாக உள்ள சிலர் எல்லா சாதிகளிலும், எல்லா மதங்களிலும், எல்லா இனங்களிலும் உள்ளனர்.
இதனால்தான் சட்டசபையை விமர்சனம் செய்யும் கார்ட்டூனால் நமது ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்று அச்சப்படுபவர்கள், பத்திரிகை ஆசிரியரைச் சிறையில் அடைக்கிறார்கள். இந்த அச்சமே, ஆட்டோவில் அடியாட்களை அனுப்பத் தூண்டு கிறது. இந்தப் பாதுகாப்பற்ற உணர்வே வழக்குகளாலும் விளம்பர மறுப்புகளாலும் கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை நெரிக்கப் பார்க்கிறது. இதில் ஒப்பீட்டளவில் வேண்டுமானால், ‘அவர்களுக்கு இவர்கள் பரவாயில்லை’ என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர, அதில் ஒரு பொருளும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால், ஜனநாயகத்தில் ஒரு கருத்துக்கு எதிர்கருத்து இருந்தால், அதை வெளிப்படுத்த ஆரோக்கியமான வழிமுறைகள் ஏராளமாக உள்ளன. அருண்ஷோரி எழுதிய ஒரு புத்தகத்தில் டாக்டர் அம்பேத்கர் குறித்து மோசமான வரிகள் இடம் பெற்றிருந்தன. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த தலித் எழுத்தாளரான நாம்தியோ தசால் போன்றவர்கள் அந்த எழுத்தை விமர்சனம் செய்தார்கள்... அருண்ஷோரியின் நோக்கத்தை அம்பலப்படுத்துவதாகவும் விஷமத்தனத்தைத் தோலுரித்துக் காட்டுவதாகவும் சொன் னார்கள். ஆனால், புத்தகத்தைத் தடைசெய்யுமாறு கோர வில்லை. ஜனநாயகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் இந்தவிதமான போராட்டத்தையே ஆதரிக் கிறார்கள்.
ஆனால், இங்கே பெரும் பாலான கட்சிகளும் இயக்கங் களும் ஜனநாயகத்தையே தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றன. பெரும்பான்மையோருக்குக் கட்டுப்பட்டு சிறுபான்மையினர் வாழ்வதே ஜனநாயகம் என்று நினைக்கிறார்கள். அதாவது பெரும் பான்மை மக்களின் விருப்பத் துக்கு ஏற்ப அமைந்த ஆட்சி, எது செய்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க் கிறார்கள். இடித்துரைக்கும் எதிர்க்கட்சி இல்லாத ஆளும்கட்சி யாருடைய கெடுதலும் இல்லாமல் தானே அழிந்துபோகும் என்று புரிய மறுக்கிறார்கள். எவ்வளவு குறைந்த ஆதரவு கொண்ட கருத் தாக இருந்தாலும், அதை வெளிப் படுத்துவதற்கான வாய்ப்பு மறுக்கப் பட்டால், அதன்பிறகு கருத்துச் சுதந்திரம் குறித்துப் பல அரசியல் தலைவர்களும் பேசுவதில் எந்த பயனும் இல்லை.
ஒரு சுதந்திரமான ஜனநாயக நாட்டில் அரசமைப்புச் சட்டமே எல்லாவற்றையும் விட உயர் வானது. எனவே சில பண்பாட்டுக் காவலர்கள் வெளியிடும் உத்தரவுகள், மக்களை ஆள்வதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. சிறுபான்மைக் குரலாக எழும் எதிர்ப்புக் கருத்து வெளிப்படு வதற்கும் அதை வெளியிடுபவர்க் கும் பாதுகாப்பளிக்க வேண்டியது அரசின் கடமை. ஏனென்றால், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பிரதானமாக அரசுக்குத்தான் இருக்கிறது!

1 comments:

Unknown said...

நல்ல கருத்துக்கள்.என் ஆதரவு இந்த பதிவுக்கு உண்டு.