சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவது அல்ல,
சம வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்வது!

-ஏங்கல்ஸ்

காலையில் மழை சோவென கொட்டத்துவங்கியது. சதாராவின் வீதியில் பள்ளிக்குப் புறப்படும் தறுவாயில்இருந்த சிறுவர்கள் ஐந்தாறு பேர் மழையையே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். இதையே சாக்காக வைத்துக்கொண்டு இன்று எப்படியும் பள்ளிக்கு மட்டம் போட்டுவிடுவது என்பது அவர்களுடைய திட்டம். அவர்களுள் ஒருவனாக நின்ற சிறுவன் பீமின் மனதிலோ வேறு எண்ணம். என்னதான் மழை விடாமல் பெய்தாலும், இன்று எப்படியும் பள்ளிக்குச் செல்வது என அவன் முடிவெடுத்திருந்தான். இதைக் கேட்ட மற்ற சிறுவர்கள் பீமைக் கேலி செய்தனர். ''உன்னால்இந்த அடைமழையில் பள்ளிக்குச் செல்ல முடியுமா?'' எனச்சவால் விட்ட.னர். அடுத்த நொடியே, எதையும் பொருட்படுத்தாமல் பீம் தெருவில் இறங்கி நடக்கத் துவங்கினான். எப்படியெல் லாம் தனது புத்தகப் பையை ஈரம் படாமல் பாதுகாக்க முடியுமோ, அதற்கான முயற்சிகள் அனைத்தையும் மேற் கொண்டபடி, பள்ளியை நோக்கி விறுவிறுவென நடந்துசென்றான். ஓரிடத்தில் மழை மிகக் கடுமையாகக் கொட்டத் துவங்க, அருகிலிருந்த வீடொன்றில் அவன் ஒதுங்கி நின்ற சமயம், வீட்டிலிருந்து வெளியே வந்த ஒரு பெண்மணி கோபத்துடன் பீமைப் பார்த்தாள். அடுத்த நொடி, பீம் தெருவில் விழுந்துகிடந்தான். தன் நெஞ்சோடு இறுக்கமாக அவன் பிடித்திருந்த புத்தகப் பையினுள் இப்போது நீர் முழுவதுமாகப் புகுந்திருந்தது. எழுந்து நின்றான். அவனுக்கு எதிரே இன்னமும் அந்தப் பெண்மணி ஆவேசத் துடன் நின்றுகொண்டு இருந்தாள். ''நீ ஒரு மகார்! என்ன தைரியம் இருந்தால் இந்த வீட்டுக்குள் காலடி வைப்பாய்?'' என இரைந் தாள். அந்தக் கொட்டும் மழை ஈரத்தையும் மீறி, தீண்டாமை எனும் கொடிய நெருப்பு சிறுவன் பீமின் இதயத்தை எரித்தது.



தனது குழந்தைகளை எந்தப் பேய் நெருங்கிவிடக் கூடாது என கிராமத்திலிருந்து ராம்ஜி சக்பால் நகரத்துக்கு அழைத்து வந்தாரோ, அங்கேயும் அது வெவ்வேறு வித மான ரூபங்களில் தன் குழந்தை களைப் பயமுறுத்தி வருவதைக் கண்டு அவர் மிகுந்த மன வேதனை கொண்டார்.

பீம் வளர்ந்து பெரியவன் ஆனான். ஆரம்பக் கல்விகள் முடிந்து, உயர்நிலைக் கல்வியில் சேரும் நேரமும் வந்தது. பள்ளி யில் தன் மகனைச் சேர்க்கச் சென்றபோது, இம்முறை ராம்ஜி கூடுதல் கவனத்துடன் புதிய பள்ளியின் சாதியத் தொந்தரவு களிலிருந்து மகனைப் பாதுகாக்க ஒரு புதிய உத்தியை மேற்கொண் டார். அதன்படி, பீம் எனும் அவன் பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டு இருக்கும் பட்டப் பெயரான சக்பாலை எடுத்துவிட்டு, பீமின் மேல் பற்று வைத்திருந்த ஆசிரியர் ஒருவரின் பெயரைச் சேர்க்க முடிவு செய்தார். அந்தப் பெயர்தான் அம்பேத்கர். இன்று இந்தியாவின் ஒவ்வொரு கடைசி மனிதனுக்கும் வாழ்வதற்கான நம்பிக்கையையும், போராடுவதற்கான வலிமையையும் ஊட்டும் பெயராக விளங்கி வரும் அந்தப் பெயர் உருவாக்கம் பெற்றது இப்படித்தான். அதுவரை பீமாராவ் சக்பால் என்று அழைக்கப்பட்ட அந்தச் சிறுவன், அன்று முதல் பீமாராவ் அம்பேத்கராக மாறினான்.

ராம்ஜி சக்பாலுக்கு இச்சமயத்தில் மகாராஷ்டிரத்தில் காரேகான் எனும் இடத்தில் காசாளர் வேலை கிடைத்தது. எனவே அவர், தன் பிள்ளைகளை அவர் களின் அத்தையின் பொறுப்பில் விட்டுவிட்டு அங்கே சென்றுவிட் டார். விடுமுறை நாளின்போது அம்பேத்கர், அவரின் சகோதரன் மற்றும் அக்காள் மகன் ஆகிய மூவரும் தங்கள் தந்தையைச் சந்திக்கவேண்டி, காரேகானுக்கு ரயிலில் புறப்பட்டு மசூர் ரயில் நிலையத்தை அடைந்தனர். அங்கே அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. குறித்த நேரத்தில் இவர்கள் வரும் தகவல் கிடைக்காத காரணத்தாலோ என்னவோ, இவர்களை அழைத் துப் போக ரயில் நிலையத்துக்குத் தந்தை வரவில்லை. மூவரும் வாட கைக்கு ஒரு மாட்டுவண்டியைப் பிடித்து காரேகான் செல்லத் தயாராயினர். பாதித் தொலைவு சென்றிருப்பார்கள்... வண்டிக்கார னுக்கு தான் மகார் இனச் சிறுவர்களை ஏற்றிச் செல்கிறோம் என்பது தெரிய வர, சட்டென ஆத்திரப்பட்டவன் அப்படியே அந்த வண்டியைக் குடை சாய்த்து மூன்று சிறுவர்களையும் கீழே உருண்டு விழச் செய்தான். அதன் பிறகு மிகுந்த சிரமத்துக்கிடையே மூவரும் தட்டுத் தடுமாறி, ஒரு வழியாக காரேகானுக்குச் சென்று சேர்ந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தாக மிகுதியால் ஒரு குளத்தில் இறங்கி நீர் குடிக்கச் சென்றபோது ஊரார் ஒன்று சேர்ந்து துரத்தி அடித்த சம்பவம், சிகை திருத்தும் நிலையத்தில் முடி பாதி வெட்டப்பட்ட நிலையில் அரைகுறையாக இறக்கிவிடப் பட்டு அவமானத்தோடு வீடு வந்து சேர்ந்து, சகோதரிகளால் மீதமுள்ள முடி திருத்தப்பட்ட சம்பவம் எனச் சிறுவயதிலேயே தீண்டாமையின் கொடுமை வெந்தணல் கொப்புளங்களாக அவர் உள்ளத்தில் நீர் கட்டி நின்றன. கல்வி ஒன்றுதான் இவை அனைத்துக்கும் தீர்வு என்பதை நன்கு உணர்ந்துகொண்ட அம்பேத்கர், முன்னிலும் தீவிரமாகப் படிப்பில் நாட்டம் செலுத்தத் துவங்கினார்.

பள்ளியில் அம்பேத்கர் தனது ஆழ்ந்த படிப்பாலும், இனிமையான சுபாவத்தாலும், எதனையும் ஆய்ந்தறிந்து வெளிப்படுத்தும் நுண்ணறிவாலும் தனித்துவமான மாணவனாக விளங்கினார். என்றாலும், சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மூளையில் புற்றுநோயாக ஒட்டிக்கொண்டு இருந்த சாதியம் எனும் வெறி, அவரை மனதளவில் பள்ளியிலிருந்து விலகியிருக்கவே செய்தது. இதனால் பள்ளிக்காலங்களில் அம்பேத்கருக்குத் தோழர்கள் என யாரும் இல்லை. ஆனால், அந்தக் குறையைப் புத்தகங்கள் போக்கின. ஒரு நல்ல நூலைக் காட்டிலும் சிறந்த நட்புவேறு எதுவாக இருந்துவிட முடியும்? சமயம் கிட்டும்போதெல்லாம் அந்த நண்பர்களுடன் தனது நேரத்தை முழுமையாகச் செலவிடுவார் அம்பேத்கர். மாலை நேரங்களில் அருகில் இருக்கும் பூங்காக்களுக்குச் சென்று, இந்த உலகத்தையும் மனிதர்களையும் வேடிக்கை பார்க்கத் துவங்குவார்.

இப்படிச் சிறு வயதிலேயே ஆழ்ந்த சிந்தனையும் தனிமை யுமாகக் காணப்பட்ட அந்தச் சிறுவனை, அந்தப் பூங்காவுக்கு வழக்கமாக வரும் ஒரு நபர் நாள்தோறும் கவனிக்கத் துவங்கினார்.அவர் பெயர் கிருஷ்ண அர்ச்சுன ராவ் கெலுஸ்கர். வில்சன் ஹைஸ் கூலின் தலைமை ஆசிரியரான அவர், அப்போதே இந்தச் சிறுவனிடம் அசாத்தியமானதொரு சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டார்.



அந்த வருட மெட்ரிகுலேஷன் தேர்வுகளின் முடிவுகள் வெளி யானபோது, தாழ்த்தப்பட்ட மாணவர்களில் ஒருவன் முதல்முறையாக மெட்ரிக்கில் தேர்ச்சி பெற்றது மிக முக்கியமான செய்தியாக அங்கிருப்பவர்களால் பேசப்பட்டது. 'நமது சமூகத்தில் முதல்முறையாக ஒருவன் செய்திருக்கும் சாதனையை நாம் கொண்டாடவேண்டும்' என அந்த மக்கள் முடிவு செய்து, அதற்கென ஒரு விழாவை ஏற்பாடு செய்தார்கள். அந்த விழாவுக்கு அவர்கள் சிறப்பு விருந்தினராக ஒருவரை அழைத்தார்கள். அவர் கெலுஸ்கர். பூங்காவில் பார்த்து, எந்த மாணவ னைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் கொண்டிருந்தோமோ, அதே மாணவனுக்குத்தான் நாம் பரிச ளிக்கப் போகிறோம் என்பதை அறிந்து, அந்த ஆசிரியருக்கு மட்டற்ற மகிழ்ச்சி!

விழாவில், சிறுவன் அம்பேத் கரை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய்க் கட்டியணைத்துப் பாராட்டிய கெலுஸ்கர், அவனது உள்ளத்து உறுதியைக் கண்டு, ஒரு புத்தகத் தைப் பரிசாக அளித்தார். பின்னாளில் அந்தப் புத்தகம்தான் அம்பேத்கரின் வாழ்க்கையையே தலைகீழான மாறுதலுக்கு உள்ளாக்கப் போகிறது என்பதை அவர்கள் இருவருமே அப்போது அறிந்திருக்க இயலாது!



-சரித்திரம் தொடரும்

0 comments: