கக்காநாட்டின் இந்த ஜனாதிபதியும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட கொஞ்ச நேரத்திலேயே பதவி விலகிவிட்டார். இது எதிர் பார்க்கப்பட்டதுதான். அண்டையிலிருக்கும் உச்சாநாட்டிலும் கலீஜ்பாளையத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகள் முழுமையாக தங்கள் பதவிக்காலத்தில் நீடிக்கிறார்கள். இங்கு அப்படியா... கடந்த பத்துவருடங்களில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தேர்தலை அறிவிப்பது, நடத்துவது, பதவியேற்கிறவர் ஜனாதிபதியாகி விட்டதன் அடையாளமாக தனது மாளிகையில் உள்ள கழிவறைக்கு சென்று திரும்பியதும் அவர் ராஜினாமா செய்துவிடுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. பக்கத்துநாடான இந்தியாவில் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி போன்ற கிராமங்களில் நடந்ததைப்போல கக்காநாட்டு ஜனாதி பதியை யாரும் வற்புறுத்தியோ மிரட்டியோ பதவி விலகச் சொல்வதில்லை. இவர்கள் தாங்களாகவே முன்வந்து விலகிவிடுகின்றனர்.

கடந்த பத்தாண்டுகளாக இங்கு தொடர்ந்து ஜனாதிபதியே இல்லாததால், இந்நாட்டிற்கு வருகிற வெளிநாட்டு அதிபர்களுக்கும் அரசர்களுக்கும் அவர்களோடு உதட்டுச்சாயம் பூசிக் கொண்டு வருகிற குட்டைக்கவுன் மொழி பெயர்ப்பாளினிகளுக்கும் வரவேற்பளித்து தேநீர் விருந்து கொடுக்கிற மிக முக்கியமான பணி முடங்கிவிட்டது. எனவே ஜனாதிபதி மாளிகையில் வாங்கி அம்பாரமாய் குமிக்கப்பட்டிருந்த டீத்தூள் பயனின்றி மக்கிக் கொண்டிருந்தது.

பழக்கதோஷத்தில் பால்காரன் தினமும் போட்டுவிட்டுப் போகும் பால் பாக்கெட்டுகள் கேட்பாரற்று வாசலில் கிடந்தன. பால் திரிந்து எழும் துர்நாற்றம் அப்பகுதியை எல்லைதாண்டிய/தாண்டாத பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதாயிருந்தது. இதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து வரும் முக்யஸ்தர்கள், தம்மை வரவேற்று உபசரிக்க யாருமில்லையே என்ற துக்கத்தோடு அவர்களாகவே ரோட்டோர கடைகளில் வண்டியை நிறுத்தி டீ குடித்து விட்டுப் போகவேண்டியிருந்தது. தங்களுக்கிணையான அந்தஸ்தில் யாருமேயில்லாத ஒரு நாட்டிற்கு செல்லும்போது இத்தகைய அவமானங்களை சந்திக்க நேர்வது குறித்து உளைச்ச லடைந்த அவர்கள் கக்காநாட்டுடனான ராஜீய உறவுகளை துண்டித்துக் கொண்டனர். அங்கெல்லாமிருந்த கக்காநாட்டுத் தூதரகங்கள் மூடப்பட்டன.

இதற்குமுன் பதவி விலகியவர்களைப் போலவே இந்த ஜனாதிபதியும், எதற்கும் உதவாத வெறும் அலங்காரப் பதவியில் நீடித்திருப்பதைவிட ஒரு தூய்மைப் பணியாளராகி மக்களின் செப்டிங் டேங்க் சுத்தம் செய்வது, கக்கூஸ் கழுவுவது, தெருக்கூட்டுவது போன்ற வேலை களில் ஈடுபட வேண்டுமென்பதே தன் வாழ்நாள் லட்சிய மென்றும் ஆகவே தான் பதவி விலகுவதாகவும் தன் அறிக்கையில் தெரிவித்திருந்தார். தான் நினைத்ததை துணிந்து பேசிட ஒவ்வொரு ஆண்டும் குடியரசுதினம் வரைக்கும் காத்திருக்க வேண்டிய இந்த அடிமைப் பிழைப்பை சுதந்திர வேட்கையும் மானவுணர்வுமுள்ள எந்தவொரு பிரஜையும் ஏற்கமாட்டான் என்பதை உலக றியவே அவர் இம்முடிவை எடுத்திருப்பதாய் அறிக்கை மேலும் தெரிவித்தது.

''ஆட்டுக்கு தாடியும் பூட்டுக்கு சாவியும் தேவையில்லாததைப் போலவே நாட்டுக்கு ஜனாதிபதியும் தேவையில்லை என்று எங்கள் தலைவர் அன்றே சொன்னார்'' என்று சுவரொட்டி மூலமாக ஒரு கட்சி இந்த ராஜினாமாவை வரவேற்றிருந்தது.

வீதிகளையும் கழிவறைகளையும் துப்புரவாய் சுத்தப் படுத்தி சுகாதாரத்தைப் பாதுகாத்து மக்கள் ஆரோக்கிய மாய் வாழ சேவையாற்றும் தூய்மைப் பணியாளரைவிட, நாடுநாடாய் சுற்றிக்கொண்டும்- எதுவும் புரியாத பள்ளிச் சிறார்களிடம் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்போல் கண்டதையும் பேசிக்கொண்டும் இறக்குமதித் துணியாலான தேசியக்கொடியை ஏற்றிட கோடிக்கணக்கில் செலவழித்தும் திரிகிற இந்தப் பதவி நாட்டுக்கு முக்கியமல்ல என்று ஒரு ஜனாதிபதி உணர்ச்சிவயப்பட்டு பேசியதில் ஆரம்பித்ததுதான் இந்த வினை.

அப்படியானால் உபயோகமற்ற ஜனாதிபதிக்கு வழங்குவதைவிட நாட்டுக்கு மிகவும் அவசியமான தூய்மைப்பணியாளருக்கு கூடுதல் சம்பளமும் சலுகைகளும் வழங்கத் தயாரா என்ற கேள்வி எழப் போய் கடைசியில் மலம் அள்ளும் தொழிலைச் செய்கிறவர்களுக்கு ஜனாதிபதியின் சம்பளத்திற்கு மேல் ஒரு ரூபாய் சேர்த்து வழங்கப்படும் என்று அவசரச் சட்டம் நிறைவேற்ற வேண்டியதாகிவிட்டது. அது வெறும் சம்பளத்துடன் முடியவில்லை. ஜனாதிபதி மாளிகையில் 300அறைகள் உள்ளதெனில் 301 அறைகளைக் கொண்ட தாய் இருந்தது தூய்மைப் பணியாளர் குடியிருப்பு.

அதற்கு வாடகை, மின் கட்டணம், தண்ணீர்க் கட்டணம் எதுவும் கிடையாது. நகரின் வெளியே மாசற்ற காற்றும் குளிர்ந்த நன்னீரும் கிடைக்கும் நிலப்பரப்பில் அடர்ந்த மரங்களுக்கிடையில் மறைந்து எப்போதும் பறவை களின் வினோத ஒலிகளில் கிறக்கமுற்று இருப்பதாய் அமைந்திருந்தன அந்த குடியிருப்புகள். குடியிருப்பில் இம்மென்றால் ஏனென்று கேட்கவும் நிறைவேற்றவும் திரும்பிய பக்கமெல்லாம் உதவியாட்கள்.

அதிகாலையில் இருசொட்டு ஒடிகோலன் விடப்பட்ட இதமான வெந்நீரில் கமகம வென குளித்து காக்கிச்சட்டை, காக்கி அரைக்கால் டிரவுசர் (பெண்களுக்கு காக்கி புடவை, ரவிக்கை) உடுத்தி கனகம்பீரமாக தூய்மைப் பணியாளர்கள் வீட்டிலிருந்து வெளியே வரும்போது அவரவர் வாசலில் சைரனும், சிவப்பு சுழல்விளக்கும் பொருத்திய கார் தயராய் நிற்கும். அவர்களது கார்களுக்கு பதிவெண்கள் கிடையாது. விஐபி அந்தஸ்தைக் குறிக்கும் 3 அல்லது 5 நட்சத்திரங்களும் அரசு இலச்சினையும் மட்டுமே பொறிக்கப்பட்டிருக்கும். முகப்பில் தேசியக்கொடி. டிக்கியைத் திறந்து பணியிட உபகரணங்களாகிய துடைப்பம், தொரட்டி, ஏந்துகரண்டி, பினாயில் பாட்டில், குளோரின் பவுடர் பாக்கெட், கையுறைகள், மாஸ்க் ஆகியவை உள்ளனவா என ஒருமுறை சோதிக்கப்படும். பின் வண்டி கிளம்ப வேண்டியதுதான்.

நகரின் பிரதான சதுக்கம்வரை அணிவகுத்துச் செல்லும் அவ்வண்டிகள் அங்கிருந்து பல்வேறு பாகங்களுக்கும் பிரிந்து செல்லும் அழகே தனிதான். வழிநெடுக குழந்தை களும் பள்ளிச்சிறாரும் பூங்கொத்துகளை ஆட்டி தெரிவிக்கும் காலை வணக்கத்தை ஏற்றுக்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களை ஆங்காங்கே இறக்கிவிட்டு சாலை யோரப் பூங்காக்களின் நிழலில் வண்டிகள் காத்திருக்கும். எட்டு மணியளவில் பிரபல உணவுவிடுதி ஏதாவதொன்றிலிருந்து மெய்க்காப்பாளரால் பரிசோதித்து வாங்கி வரப்படும் காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொள்ள அரை மணிப்பொழுது ஓய்வு. ஓய்வின்போது புகைக்க கியூப சுருட்டு வழங்கப்படும். (பிடல் காஸ்ட்ரோவை கொல்ல சுருட்டில் மெதுநஞ்சு கலந்த சிஐஏ சதி அம்பலமான பிறகு தடயவியல் நிபுணர்களால் கடுமையாக சோதிக்கப்பட்ட பிறகே சுருட்டு வழங்கப்படுகிறது) இந்த சிற்றுண்டிக்கும் பணிநேரத்திலான மதிய உணவு, தேநீர், லாகிரி வஸ்துக்கள் போன்றவற்றுக்குமான அலவன்சுகள் ஊதியத்தை விடவும் கூடுதலாக இருந்தன. மிலிட்டரி சரக்கைப் போலவே ஸ்கேவன்ஜர் சரக்கு (கேஎம்எப்எல்) என்பதும் சமீபத்தில் புகழடைந்த ஒன்று.

ஊராரின் அசுத்தங்களை சுத்தப்படுத்தும்போது ஏற்படும் துர்நாற்றம், அசூயை, அருவருப்பு, மனசஞ்சலத்தை உணராதிருக்க குடித்த மறுநொடியிலேயே போதையின் உச்சத்தை அடைய வைக்கிற அளவுக்கு அந்த சரக்குகள் வீர்யமுள்ளவையாய் இருந்தன. இவற்றை தூய்மைப் பணியாளருக்கு வழங்குவதற்கென்றே வட்டத் தலை நகரங்களில் தனியாக கேன்டீன்களும்கூட உருவாக்கப் பட்டுள்ளன. ஆண் பெண் இருபாலருக்குமே குழந்தைகளுக்கும் இங்கு தனித்தனியாக கோட்டா உண்டு.

இருவருமே தூய்மைப் பணியாளராகவே இருக்க வேண்டியுள்ளதால் இந்த ஏற்பாடு. இவ்வகையான மது வகைகளை உலகின் பிறநாடுகளில் உயரதிகாரிகள், ராஜ வம்சத்தார் மட்டுமே உபயோகிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் கக்காநாட்டு தூய்மைப் பணியாளர்கள் அவற்றை சர்வசாதாரணமாக குடித்து வந்தனர். அரிதாக குடிப்பழக்கம் இல்லாத ஒருசில பணியாளர்களின் டோக்கனைப் பயன்படுத்தி நாட்டின் உயர்குடியினர் சிலர் கள்ளத்தனமாக கோட்டாவை வாங்கிக் கொள்வது முண்டு. கண்டவர்களின் அசுத்தத்திலும் புழங்கி அலுப் பும் அயர்ச்சியும் கண்டுவிடுகிற தூய்மைப்பணியாளர்கள் மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கொள்ளும் வகையில் அவர்கள் குடும்பத்தோடு வருடத்தில் இரண்டுமுறை உலகத்தின் எப்பகுதிக்கும் சென்று உல்லாசமாய் சுற்றி ஓய்வெடுத்துத் திரும்ப இலவச விமான டிக்கெட்டுகள் வழங்குகிற ஏற்பாடும் நடப்பிலிருக்கிறது.

இதில்லாமல் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்குதல் அல்லது பணியிடத்தில் வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடுமானால் நாட்டின் தலைமையகத்திலுள்ள ஏகேஐஎம்எஸ் (ஆல் கக்காநாடு இன்ஸ்டிடியூட் ஆ•ப் மெடிக்கல் சயின்சஸ்) மருத்துவ மனைக்கு உடனடியாக தனி விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர். ஒருவேளை உயிரிழப்பு நேர்ந்துவிடுமெனில் அப்பணியாளரின் குடி யிருப்பும் அவர் உபயோகித்த காரும் அவரது குடும்பத்தா ருக்கே சொந்தமாக்கப்படுவதோடு இழப்பீடாக பெருந் தொகையும் மாதாந்திர ஓய்வூதியமும் வழங்கப்பட்டன. வாரீசுதாரருக்கு வேலையும் உண்டு. டேங்கில் இறங்கி மீண்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசுதின விழாவில் வீரதீர செயலுக்குரிய நாட்டின் மிகவுயரிய விருதும் பணமுடிப்பும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நட்சத்திர உணவுவிடுதியையோ நகைக்கடையையோ திறந்துவைக்கவும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வில் சிறப்பு விருந்தினராய் பங்கேற்குமாறும் சுகாதார அமைச்சர்களின் சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைக்குமாறும் புதுப்பட ப்ரிவியூ காட்சிக்கு வரவேண்டு மென்றும் தூய்மைப் பணியாளர்களை தொல்லைப் படுத்தும் போக்கு கக்காதேசத்தில் அதிகரித்து வந்தது. பேட்டிக்கான டி.வி.களின் தொல்லையும் கூடிவிட்டது. கல்லூரி மாணவர்கள், இளைய தலைமுறையினரிடயே காக்கிசட்டையும் காக்கி டிரவுசரும் பிரபலமடைந்து வந்தன. வைபவங்களிலும் கொண்டாட்டத்திற்குரிய தருணங்களிலும் ஸ்கேவஞ்சர்/ஸ்வீப்பரைப் போல உடுத்திக்கொள்வதை மிகுந்த பெருமைக்குரியதாய் கருதும் போக்கு அவர்களிடையே பரவிவந்தது.

தூய்மைப் பணியாளருக்கு கிடைக்கிற வருமானமும் சலுகைகளும் ஊரையே சுத்தம் செய்கிறவர் என்ற மரியாதையும் இத்தொழிலுக்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்ற ஆசையை யாவருள்ளும் கிளறிவிட்டது. நாட்டின் மாவட்ட, மாநில, தலைமை நீதியமைப்பு களாயிருந்த எச்ச, சொச்ச, மிச்ச நீதிமன்றங்களின் நீதிபதிகள் தங்களுக்கு தூய்மைப் பணியாளருக்கு இணையான சம்பளம் சலுகை வழங்குமாறு அரசிடம் போர்க் கொடி உயர்த்தினர். ஐ.டி படித்து முடித்ததும் டாலர் பிச்சையெடுக்க பறந்தோடி வருவோரது எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவது கண்டு பதற்றமடைந்த யு.எஸ். புதிய குடியுரிமைச் சலுகைகளை அறிவித்தது. எப்போதும் திருவிழாக் கூட்டம்போல் நிரம்பி வழியும் பாஸ்போர்ட் அலுவலகங்கள் வெறிச்சோடத் தொடங்கின.

பாஸ்போர்ட்டை வாயில் கவ்விக்கொண்டு பிறந்த வர்கள் இப்போது ஏன் ஸ்டேட்சுக்கு செல்வதில் ஆர்வம் காட்டாமல் இப்படி தூய்மைப் பணியாளர் வேலைக்குப் பறக்கிறீர்கள் என்று கேட்டால் ‘வெளியூர் லாபமும் சரி உள்ளூர் நஷ்டமும் சரி’ என்று இளைஞர்கள் தங்கள் முடிவை நியாயப்படுத்தினர். பன்னாட்டு நிறுவனங் களை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட சிஇஓக்களை விடவும் அந்நிறுவனங்களின் ஸ்கேவஞ்சருக்கு கூடுதல் சம்பளமும் சலுகைகளும் வாய்த்ததும் இக்காலத்தில் தான்.எனவே அவர்கள் மாதக்கடைசியில் கேளிக்கை விடுதி செலவுகளுக்கு ஸ்கேவஞ்சர்களிடம் கைமாற்று வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஸ்கேவஞ் சர்களை பசப்பி ஏமாற்றி சிஇஓவாக சிக்கவைத்துவிட்டு அவர்களது துடைப்பத்தையும் மலக்கரண்டியையும் கைப்பற்றும் ரகசியமோசடியில் ஈடுபட்டனர். டாக்டர் வக்கீல் கலெக்டர்கூட இத்தகைய ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுவதாய் தகவலுண்டு. இதைவிட பெரிய கூத்து என்னவென்றால், ஜனாதிபதிகள் ராஜினாமா கொடுத்து விட்டு எஸ்எஸ்சி தேர்வெழுதி தூய்மைப் பணியாளராக ஆசைப்பட்டதுதான். (வீடுவீடாக கெஞ்சியும் ஜனாதி பதியாவதற்கு ஒருவரும் முன் வரவில்லை. மிஞ்சி வந்தா லும் நாமினேஷன் தாக்கலிடும் நேரத்தில் ஒன்னுக்கு வருவதாய் ஒருவிரலைக் காட்டிவிட்டு ஓடி தலைமறை வாகிவிடுகிறார்கள். கடைசியில் பக்கத்து நாடுகளி லிருந்து ஆள்பிடித்து ஜனாதிபதியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அரசு).

'ஆசையிருக்கு மலமள்ள அம்சமிருக்கு கலெக்டராக' என்பதுபோல எல்லோருக்கும் ஆசையிருந்தாலும் ஒரு தூய்மைப் பணியாளராய் சேர்வது அப்படியொன்றும் எளியக் காரியமாயிருக்கவில்லை. அதற்கான எஸ்எஸ்சி (ஸ்கேவஞ்சர்/ ஸ்வீப்பர் செலக்ஷன் கமிஷன்) தேர்வில் வெற்றி பெற்றாகவேண்டும். அதைக்கூட மனப்பாடம் செய்து ஒருவர் எழுதிவிட முடியும். ஆனால் செய்முறைத் தேர்வு? மகா கடினம். அதில் பெறும் மதிப்பெண்ணைப் பொறுத்தே ஒருவரின் வேலை தீர்மானிக்கப்படுகிறது. இந்த செய்முறைத் தேர்வு முடிந்தபின் நேர்முகத்தேர்வு. நேர்முகத்தேர்வில் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப் படுவதாயும், பிரதமர் உள்ளிட்ட எவரின் சிபாரிசும் அங்கு செல்லுபடியாகாதென்றும் கருத்துள்ளது. தகுதியும் திறமையுமுள்ள விண்ணப்பதாரரை பகிரங்கப் போட்டியின் மூலமே தேர்வு செய்யவேண்டும், அல்லாவிடில் பணியின் தரம் குறைந்துவிடும் என்பதால் இத்தனை கெடுபிடிகள் நிறைந்ததாய் இருந்தது தேர்வுமுறை.

இத்தேர்வுக்கு தயார்படுத்திட நாடெங்கும் பல்வேறு கல்லூரிகள் தொடங்கப்பட்டன. செழித்த அனுபவமும் நிபுணத்துவமும் வாய்ந்த, ஓய்வு பெற்ற தூய்மைப் பணி யாளர்களால் இம்மையங்கள் நிர்வகிக்கப்பட்டன. லட்ச லட்சமாய் காசுபணம் கொட்டி இடம் பிடித்து சேர்ந்து விடினும் பாடத்திட்டம் மிகக்கடுமையாகவே இருந்தது. எல்லாமே செய்முறைப் பயிற்சிதான். முதற்பாடம் தொடங்கும் முன் கேன்டீனிலிருந்து சலுகைவிலையில் பெறப்பட்ட மதுவகைகளை மூக்குமுட்ட குடித்தாக வேண்டும்.

அரைமயக்க நிலைக்காட்பட்டு மலத்தையும் சந்தனத்தையும் ஒன்றென பாவிக்கும் மனோநிலையை எய்துவதற்கே இந்த ஏற்பாடு. இருமருங்கும் பலவண் ணங்களிலும் தினுசுகளிலும் மலம் நிறைந்துள்ள தெரு வோரத்தில் அமர்ந்து மாணாக்கர்கள் தங்கள் காலை ஆகாரத்தை உண்ணவேண்டும் என்பதே முதல்பாடம். துளியும் முகச்சுளிப்பின்றி குமட்டி குடல்புரட்டி வாந்தி யெடுக்காமல் உண்போர் மட்டுமே அடுத்த பாடத்திற்கு செல்லமுடியும். இச்சோதனையில் தேறியோர் தெருவில் குமிந்துள்ள மலக்குவியல்கள்மீது சாம்பல் தூவி ஏந்து கரண்டியால் துப்புரவாக சுரண்டியள்ள வேண்டும்.

பின் தெருவை சுத்தமாகக் கூட்டி பவுடர் தெளிக்கவேண்டும். இவ்வேலைகளை செய்யும்போது டுர்டுர்ரென உலும்பிக் கொண்டு வரக்கூடிய பன்றிகளை செல்லமாக விரட்டத் தெரிந்திருக்கிறதா என்பதும் பயிற்றுநர்களால் கவனிக்கப் படும். பன்றிகள் விட்டை போடுமானால் அவற்றையும் முகங்கோணாமல் அள்ளியாக வேண்டும். தெருவிலிருந்து கிளம்பும் முன் சமுதாயக் கழிப்பிடம்/ கட்டணக் கழிப்பறை இருக்குமானால் அதை சுத்தப்படுத்துவதும் மாணாக்கர்களின் பாடத்திட்டத்திற்குள் வருவதுதான். இதற்குள் நடுப்பகலாகிவிடுமாதலால் அந்த கழிப்பறைத் தண்ணீரிலேயே கைகால் முகம் அலம்பி வாய் கொப்ப ளித்து அங்கேயே மதியஉணவை முடித்துக் கொள்ள வேண்டும். உணவுக்குப் பிறகு, காலியாக இருக்கிற கழிப் பறையில் சற்றே ஓய்வெடுக்க அனுமதியுண்டு. கலை இலக்கிய தாகம் கொண்ட மாணவர்கள் கழிவறை சுவர்களிலும் கதவிலும் காணப்படும் ஓவியங்களையும் காவியங்களையும் இப்போது படித்துக் கொள்ளலாம்.

தமது படைப்பையும் பொறித்து வைக்கலாம். பின் கிளம்பி ஆங்காங்கே அடைத்தும் தேங்கியுமுள்ள சாக்க டைகளை சுத்தம் செய்யவேண்டும். இவ்வேலைகளின் போது வெண்ணிறச்சீருடை அணிந்திருக்க வேண்டும். காலணிக்கு அனுமதியில்லை. மனோதிடத்தை குலைய வைக்கும் இந்த ஆரம்பப் பயிற்சிகளுக்கு தாக்கு பிடித்து நிற்பவர்களே அடுத்தக் கட்டத்திற்கு உயர முடியும்.

பயிற்சி தொடங்கிய ஆறாம் மாதத்திலிருந்து செப்டிக் டேங்கில் இறங்கி அடைப்புகளை நீக்கி சுத்தம் செய்யும் பயிற்சி தொடங்கும். இத்தருணத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு பயிற்சிமையம் பொறுப்பல்ல என்று உறுதி எழுதிக் கொடுத்தப் பின்தான் மாணவர்கள் அனுமதிக்கப் படுவர். இறங்கும்போது வாய்க்குள் புகுந்துவிடும் கழிவு நீருக்குப் பழகவேண்டி தெருவோர சாக்கடையிலிருந்து ஒரு மடக்கு குடிப்பதும், தலை மற்றும் உடலின் பல பாகங்களிலும் கழிவுகளை பூசிக்கொள்வதும், குப்பைத் தொட்டியிலிருந்து சானிடரி நாப்கின்களை எடுத்து வீசுவதும் இந்தப் பயிற்சிக்கான முன்தயாரிப்புகள். தொட்டிக் குள் இறங்கும்முன் மீண்டும் மது அருந்தி முக்கால் மயக்க நிலைக்குச் சென்றுவிட வேண்டும்.

ஒருவேளை இதுவே கூட கடைசியாய் குடிப்பதாக இருக்கக் கூடுமாதலால் தொட்டிக்குள் இறங்குபவர் எவ்வளவு வேண்டுமானாலும் குடித்துக்கொள்ளலாம் என்பது பொதுவாக பின் பற்றப்படும் மரபு. போதையின் உச்சத்தில் பிரக்ஞையும் மனித சுபாவங்களும் தப்பியதொரு கணத்தில் உள்ளே இறக்கிவிடப்படுவர். மீண்டு மேலேறி வருகிறவருக்கு குளிப்பதற்காக ஒருகுடம் நன்னீரும் சந்தன சோப்பும் பயிற்சிமையத்தால் வழங்கப்படுகிறது. எமன் வாயிலிருந்து மீண்டு புதுப்பிறப்பு எடுத்ததாய்க் கருதி வீடு திரும்பும் ஆண்களை குலவையிட்டு பெண்கள் வரவேற்கும் காட்சி மிகவும் நெகிழ்ச்சியானதாயிருக்கும். இச்சடங்கு கல்லூரியில் பயிலும் மாணவியருக்கானதாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கடினமான இப்பயிற்சிகளை முடித்தப்பின் எஞ்சியிருப்பவை சற்றே லகுவானவைதான். அழுகியப் பிணங்களை அப்புறப்படுத்துவது, செத்தமாட்டை புதைப்பது, பன்றி வளர்ப்பது, பன்றிக் கொட்டிலை சுத்தப்படுத்துவது என்ப தெல்லாம் அடுத்தடுத்து பயிற்றுவிக்கப்பட்டு வருட முடிவில் சான்றிதழ் தரப்படும். இதற்குள் எப்படியும் செலவு ஒன்றிலிருந்து இரண்டு லட்சம் வரையாகிவிடும். பயிற்சி முடிய இரண்டுமாதம் இருக்கும்போதே பல முன்னணி தொழிற்சாலைகளும் அரசு நிறுவனங்களும் முனிசிபாலிடிகளும் மருத்துவமனைகளும் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி பணிநியமன உத்தரவுகளை வழங்கி விடுவார்கள்.

எனவே பயிற்சி முடித்து வெட்டியாய் காலங்கழிக்கும் இக்கட்டான நிலை ஒருவருக்கும் நேர்வதில்லை. பயிற்சி முடித்தக் கையோடு வேலைக்கு எடுக்காவிடில் அவர்களுக்கு நறுமணங்களை நுகரக்கூடிய உணர்ச்சி கிளர்ந்து துர்நாற்றங்களுக்கு முகம் சுளிக்கும் கெடுமதி வந்து சேர்ந்துவிடுமானால் பின் அவர்களது பணித்திறன் பாதிக்கப்பட்டுவிடும் என்று அஞ்சி இந்த கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடத்தப்பட்டன.

பெண்களும் இக்கல்லூரிகளில் ஆர்வமாக சேரத் தொடங்கினர். அவர்களுக்கு இதே பாடத்திட்டத்துடன் தனித்துவமான வேறுசில பயிற்சிகளும் தரப்பட்டன. உதாரணத்திற்கு, போக்கிரிகள் வம்புதும்பு செய்தால் எதிர்த்துக் கேட்காதிருக்குமாறு குடும்பத்தில் சொல்லித்தரப்பட்டிருந்த அடக்கஒடுக்கத்தை அவர்கள் உடனடியாக கைவிட வேண்டியிருந்தது. யார் சீண்டினாலும் அந்நேரத்திற்கு கையிலுள்ள துடைப்பக்கட்டையாலோ மலக்கரண்டியாலோ பிய்த்தெறிந்துவிட வேண்டும் என்பதும், வேற்றார் தம்மை அண்டாமலிருக்குமளவுக்கு தம்மீது எப்போதும் தூர்நாற்றம் கமழுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் அவர்களுக்கு உடனடி பாடமாயிருந்தது. வெற்றிலை போடுவது, புகையிலை அதக்குவது, கேன்டீனிலிருந்து வரும் மதுவகைகளை நிதானம் தப்புமளவுக்கு குடிக்கப் பழகுவதும் பாடமாயிருந்தன.

இன்னும் முதுகலைப்பட்டம் பயில விரும்புவோர் செத்த மிருகங்களின் தோல் உரித்து பதனப்படுத்துவது (ரோட்டோரம் செத்து நாறிக்கிடந்த மாட்டின் தோலை உரித்துக்கொண்டிருந்த ஐவரை கல்லால் அடித்துக் கொன்ற இந்தியக் கொடூரம் கக்காநாட்டில் நிகழாதிருக்க இப்பிரிவு மாணவர்களுக்கு 'கறுப்பு சொரிநாய்ப்படை' பாதுகாப்பு தரப்படுகிறது), தோல் தொழிற்சாலைகளில் பிராஜெக்ட் டிரெய்னியாக மூன்றுமாதம் பணியாற்றுவது, நொதித்து நாறும் தோல் கழிவுகளின் நாற்றத்திற்குப் பழகும் பொருட்டு மூக்கின் நுகரும் திறனை செயலிழக்கச் செய்யும் யோகா பயில்வது, செருப்பு தைக்கப் பழகியபின் பொதுஇடங்களில் வாடிக்கையாளரை ஈர்த்து அறுந்த செறுப்புகளைத் தைத்து பாலிஷ் போட்டு பளபளப்பாக்குவது ஆகிய பாடங்களை கூடுதலாய் கற்க வேண்டியிருந்தது. இதிலும் தேறிவிட்டால் பிறகென்ன.. ஜனாதிபதியின் சம்பளத்திற்கு மேல் ஒருரூபாய் கூடுதலாகவும் முன்சொன்ன இதர சலுகைகளையும் பெற்றுக் கொண்டு கண்ணியமாக வாழ வேண்டியது அவரவர் பொறுப்பாகி விடுகிறது.

மிகப்பெரும் வேலைவாய்ப்புச் சந்தையாக திடீரென மவுசு கண்டுவிட்ட இத்துறையில் மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்ட பிறகுதான் இத்தொழிலில் நிபுணர்களையும் 'ஆய்' வாளர்களையும் உருவாக்குவதற்காக நாடு முழுவதிலும் கே.ஐ.டி (கக்காநாடு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) என்ற பெயரில் உயர்கல்வி நிறுவனங்கள் நீண்டகாலமாக செயல்பட்டுவருவதும் அங்கு மேற்சொன்ன பாடங்களில் பட்ட மேற்படிப்புகள் இருப்பதும் தெரியவந்தது. ஒரு ரகசிய அல்லது தலைமறைவு ஸ்தாபனம்போல் செயல்பட்டு வந்த இந்த 17 கேஐடிகளுக்கும் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான கோடிகளில் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துவரும் அதிர்ச்சியான தகவலும் சமீபத்தில் தான் அம்பலமானது.

சங்கேதக்குறிகளைக் கொண்டு வெளியாகும் இந்நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை விளம்பரங்களை மாயமந்திரங்கள் தொடர்பானது என்றஞ்சி கருத்தூன்றி கவனியாது விட்டதன் விளைவாக கக்காநாட்டு பெரும்பான்மை சாதியரில் ஒருவரும் கேஐடிக்குள் நுழையவேயில்லை. இங்கே யார் படிக்கிறார்கள், அவர்கள் எங்கே பணியாற்றுகின்றனர் என்பதும் எவருக்கும் தெரியாத ரகசியமாகவே இத்தனைக்காலமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கிருந்ததிய சேரிக்குள் நுழைந்தால் தீட்டு எனக்கூறி அந்தப் பக்கம் யாருமே எட்டிப்பார்க்காததால் அங்கிருந்த மாணவர்கள்தான் கேஐடிக்களை ஆக்கிரமித்திருக்கிற விசயமே வெளியில் தெரியாமல் போய்விட்டது.

மலமள்ளவும் தெருக்கூட்டவும் ஒதுக்கப்பட்ட நேரத்தைத் தவிர மற்றப் பொழுதுகளில் கிருந்ததியர்கள் யாரும் ஊருக்குள் நுழையக் கூடாது என்ற தடையுத்தரவு அமலில் இருந்ததால் இவ்வளவு காலமும் அவர்களது நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியாமல் போனது குறித்து பலபட்டறை சாதிகளும் தங்களுக்குள் கூடி பேசிப்பேசி மாய்ந்தனர். கேஐடியில் படித்த கிருந்ததியர்களை தூக்கிப்போக கேஐடி வளாகத்திற்குள்ளேயே பல விமானங்கள் காத்திருக்கும் விசயம் கூட எப்படி தங்களது சாதிச்சங்கத் தலைவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது என்று அவர்கள் அங்கலாய்த்துக் கிடந்தனர்.

பலபட்டறை சாதியாரும் கேஐடிக்கள் மீது கவனங் கொள்ளத் தொடங்கியதையடுத்து இவை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின: இங்கு சேர்ந்து படிப்பவர்களை மிகுந்த கௌரவத்திற்குரியவர்களாய் மதிக்கும் பண்பு மேலைநாடுகளில் வளர்ந்துவிட்டிருந்தது. இங்கே படிப்போருக்கு வெளிநாடுகளில் பல கக்கூசுகள் எப்போதும் திறந்தேயிருக்கின்றன. கீழ்நிலை படிப்பாளிகளைப் போல அவர்கள் தெருக்கூட்டுவதோ சாதாரண கக்கூசு கழுவுவதோ கிடையாது. பெரிய அரண்மனைகளின் அந்தபுரம், பிரபஞ்ச, உலக அழகிகள் மற்றும் நடிகைகளின் கிறக்கமூட்டும் கழிப்பறைகள், ஜனாதிபதி பிரதமர் அமைச்சர் போன்றோரின் அதிகாரம் பொங்கும் கழிப்பிடங்கள், போப்பாண்டவர் உள்ளிட்ட மதகுரு மார்களின் புனிதமலம் போன்றவற்றை மட்டுமே அவர்கள் கையாளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

மட/மத குரு ஒருவர் வாழையிலையில் வெளிக்கியிருந்த விசயம் (இச்சம்பவம்/ அசம்பாவிதத்திற்குப் பிறகு வாழையிலையில் சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. தலைவாழை இலையை விரித்து பரிமாறப்படும் பதார்த்தம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளின் மலம்போல வெவ்வேறு நிறத்தோடும் மணத்தோடும் தென்படத் தொடங்கி பின் குமட்டலெடுத்து இலையிலேயே வாந்தியெடுக்கும் வரை பலரது நிலையும் சிக்க லாகிவிட்டதையடுத்து கல்யாணம் காதுகுத்து எதுவாயினும் அங்கு முற்றாக வாழையிலை தடை செய்யப்பட்டு விட்டது.

வேண்டாத விருந்தாளிகளுக்கு வாழையிலையில் உணவளித்து அவமதிக்கும் குரூரம் சமூகத்தில் தலை தூக்கி வருகிறது) பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டப் பிறகுதான் மேற்சொன்ன அழகிகள், தலைவர்கள், புனிதர்களுக்கும் ஆசனவாய் இருக்கிற தென்பதையே பலரும் அறிந்துகொண்டனர். ‘எங்களுக்குத் தெரியும் தேவதைகளுக்கும் குசு வருமென்று’ என சனதருமபோதினியில் சுகன் கவிதை எழுதியபோது நம்மைப்போலவே அவர்களுக்கும் இருக்குமானால் அவர்கள் எப்படி தேவதையாக இருக்கமுடியுமென வாதிட்டு மறுத்தவர்கள் இப்போது ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.

இதே காலகட்டத்தில் மேலை மதத் தலைவர் ஒருவர் சிறுநீர் பிரியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அதை ஆன்மீகத்தில் சொஸ்தப் படுத்த முடியாதென்பதால் ஆபரேசன் செய்யப்போவதாகவும் செய்தி வெளியானது. ஆக யாராயிருந்தாலும் மலஜலம் கழித்தாக வேண்டியவர்களே என்பது உலகத்துக்கே ஊர்ஜிதமானது. அதற்கப்புறமே இங்கெல்லாம் ஸ்கேவஞ்சர்களாக இருப்பவர்கள் கேஐடியில் படித்த கிருந்ததியர்கள் என்பதும் தெரியவந்தது. உலகத்தின் கழிப்பறைகளில் கணிசமானவை மக்கள் தொகையில் மிகக்குறைவேயான கிருந்ததியர் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன என்ற விவரத்தைக் கேட்டவுடனேயே பலருக்கும் வயிற்றைக் கலக்கியது.

காலங்காலமாய் இத் தொழில்களில் ஈடுபட்டு பல தலைமுறைகளாக பயிற்சி பெற்று வந்திருக்கும் கிருந்ததியர்களே கேஐடியின் பெரும்பாலான இடங்களை ஆக்ரமித்திருந்தனர். எனவே புதிதாக இத்துறைக்கு படிக்கவிரும்பும் இதர சாதியைச் சார்ந்த மாணவர்களுக்கு இடம் கிடைப்பது குதிரைக்கொம்பாகவும் எறும்பின் மூத்திரமாகவும் அரிதாகியிருந்தது. கிருந்ததியர் ஏகபோகத்துக்கு எப்படியாவது முடிவு கட்டவேண்டுமெனப் பலபட்டறையினரும் கூடிப் பேசி கிருந்ததியரல்லாதார் கூட்டமைப்பை (•போரம் எகென்ஸ்ட் இன்ஈக்வாலிட்டி) நிறுவினர்.

கூட்டமைப்பு பலமுறை கூடிக் கலைந்தும், கலைந்து கூடியும் வெளியிட்ட கோரிக்கை சாசனம் கக்காநாட்டில் பெரும் பரபரப்பாகிவிட்டது. கிருந்ததியர் கட்டுப்பாட்டில் உலகத்தின் கழிப்பறைகள் இருப்பது நல்லதல்ல என்றும் அவர்கள் தயவில் தான் உலகத்தார் ஒன்னுக்கு கூட போகமுடியும் என்ற நிலை நீடிக்குமானால் அது கடும் அடக்குமுறைக்கு வழிவகுக்குமென்றும் அவ்வாறு அடக்கப்படும்போது மூத்திரப்பைகள் வலுவிழந்து உயிரிழப்பும்கூட ஏற்படுமெனவும் எடுத்தயெடுப்பில் எச்சரிக்கப்பட்டது.

மனிதனாய்ப் பிறந்த யாவருக்குமே எல்லா வகையான தகுதியும் திறமையும் இருக்கவே செய்கின்றன. ஒரு வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் கிருந்ததியரல்லாதாரும் மலமள்ளுவது தொடர்பான வேலைகள், தோலுடன் தொடர்புடையப் பணிகள், பிணத்தோடு தொடர்புள்ளக் காரியங்கள் யாவிலும் தமது தகுதி திறமையை வெளிப்படுத்திக் காட்டுவர். ஆனால் இத்தகுதியும் திறமையும் கிருந்ததியர்களுக்கு மட்டுமே கருவிலே திருவுடையதாய் பீற்றிக் கொள்வதைக் கேட்கவே அருவருப்பாய் இருக்கிறது. முடக்கப்பட்டுள்ள எமது அறிவும் ஆற்றலும் நாட்டின் கக்கூஸ்களுக்கு பயன்படும் வகையில் திருப்பி விடப்பட வேண்டுமானால் அதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் கிருந்ததியரல்லாதார் அனைவருக்கும் அவரவர் சாதிக்கேற்ப பிரதிநிதித்துவம் தரவேண்டும்.

நாட்டின் மிகவுயரிய அதிகாரமும் வருமானமும் உள்ள ஸ்கேவஞ்சர் பதவிகளை தமது சாதிபலத்திற்கும் மேல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிற கிருந்ததியர்கள், சாதி வாரி பிரதிநிதித்துவம் என்று நாங்கள் கேட்கும்போது, தமது சேரிக்குள் சாதி வேற்றுமையே கிடையாதென்றும் ஊருக்குள் என்ன நிலவரமிருந்தாலும் அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் மழுப்பலாக பதிலளிக்கின்றனர். இது முழு பூசணிக்காயை துளி பீயில் மறைக்கிற வேலை. இந்நாடு சாதியாகத்தான் இருக்கிறது என்பது உண்மையிலேயே கிருந்ததியருக்குத் தெரியாதா? சாதியின் காரணமாகத்தான் இவர்களை ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்தோம் என்பதைக்கூட மறந்துவிட்டனரா? முன்பு முத்தல நக்கம்பட்டியிலும் மருதங்குளத்திலும் ஊராட்சித் தலை வராக இருந்த இவங்காள்களை எங்காள்கள் கொன்றது கூட சாதிவித்தியாசம் இருப்பதைத்தானே காட்டியது? ஏதோ இன்றைக்கு ஸ்கேவஞ்சர் வேலைக்கு ஒரு மரியாதை வந்துவிட்டதால் தாம் ஆதியிலிருந்தே இப்படி பெருவாழ்வு வாழ்வதாய் நினைத்துக்கொள்வதா?

சாதிவாரியாக ஸ்கேவஞ்சர் பதவி நிரப்படுமானால் பணியின் தரம் குறைந்துவிடும் என்று கிருந்ததியர் வாதிடுகின்றனர். எமக்கும் மலத்துக்கும் எந்தத் தொடர்பு மேயில்லையா? தினமும் குறைந்தது மூன்றுவேளையாவது எங்களது இடக்கை மலத்தைத் தொடத்தானே செய்கிறது? எங்களுடையது மட்டுமின்றி எமது குழந்தைகள், படுத்தப் படுக்கையாகிவிடும் எம்வீட்டு கிழடுகள் ஆகியோரின் மலஜலத்தையும் சுத்தம் செய்த அனுபவம் எங்களுக்குமிருப்பதை யாராவது மறுக்கமுடியுமா? முண்ணியத்தில் ஒருவன் வாயில் திணிக்க நாங்கள் கையால் மலத்தை எடுக்கவில்லையா?

இதையெல்லாம் தொட்டக்கையால் யாருடையதை வேண்டுமானாலும் தொட்டு அள்ள முடியும்தானே...? இது என்ன பெரிய கம்பசூத்திரமா...? வீட்டுக்குள்ளேயே கக்கூசுகள் வந்த பிறகு உள்ளே வந்து கிருந்ததியர் கழுவும்பட்சம் வீடு தீட்டாகிவிடும் என்பதால் நாங்களே ஹார்பிக் மாதிரி ஏதாவதொரு கரைசலைப் பயன்படுத்தி எங்கள் வீடு களுக்குள் கழுவி சுத்தம் செய்வதில்லையா...? கறையும் அழுக்கும் இல்லாதபடி சுத்தமாக்க இந்த பிராண்ட் லிக்விட்டை பயன்படுத்துங்கள் என்று கிருந்ததியரல்லாத எத்தனையோ நடிகர்கள் கழிப்பறைத் தொட்டியை கழுவுவதைப்போல விளம்பரங்கள் வருகின்றனதானே.. என்னதான் மிக்ஸி வந்துவிட்டாலும் அம்மியில் சம்பாரம் அரைத்து குழம்புவைத்தால்தான் சுவையாக இருக்கிறது என்பதுபோல, இப்போதெல்லாம் டாய்லெட்டுகளில் ஹெல்த் வாஷ் பைப்புகள் வந்துவிட்டாலும் கையால் கழுவும் போதுதானே சுத்தமானதுபோல ஒரு திருப்தி ஏற்படுகிறது...? எனவே ஒரு கிருந்ததியனுக்கும் மலத்துக்கும் எந்தளவுக்கு தொடர்பிருக்கிறதோ அதேயளவு எங்களுக்குமுண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.

சமையலறையும் பூஜையறையும் இருப்பது போலவே எங்கள் வீடுகளில் கழிப்பறையும் இருக்கிறது என்பதி லிருந்தே நாங்கள் மலத்தை எந்தளவுக்கு நேசிக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டாமா? அந்த நேசிப்பின் வெளிப்பாட்டால்தானே நாங்கள் கக்கூசுடன் கூடிய பெட்ரூம்களை கட்டிக்கொள்கிறோம்...? அதேபோல இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த செப்டிக் டேங்கில் இறங்கி ஏறும் சாமர்த்தியம் எங்களுக்கு மட்டுமே உண்டு என்று கிருந்ததியர்கள் வாதாடிக் கொண்டிருப்பார்களோ தெரியாது. நாட்டிலிருக்கிற எல்லாநதிகளும் குளங்களும் சற்றேறக்குறைய மலக்குழிகளுக்கு நிகரான அளவுக்கு மாசடைந்து சாக்கடைகளாகத்தானே தேங்கிக் கிடக்கின்றன... அவற்றில் குளித்தால் தோஷம் நீங்கும் புண்ணியம் பெருகுமென்று கிருந்ததியரல்லாத பெரும் பான்மை மக்கள் தினமும் அவற்றில் முங்கிக் குளித்து பெற்றிருக்கும் அனுபவத்தின் காரணமாக எவ்வளவு துர்நாற்றமுள்ள செப்டிக் டேங்கிற்குள்ளும் அவர்களால் பணியாற்ற முடியும் என்று கூட்டமைப்பு சவால்விட்டு அறிவிக்கிறது. இதுவன்றி ஒவ்வொரு மனிதனும் நடமாடுமொரு செப்டிக் டேங்க்தான் என்று நம்முடைய பித்தர் மரபில் சொல்லப்பட்டுள்ள தத்துவத்தையும் இவ்விடம் நினைவுகூர்தல் வேண்டும்.

உணவுப் பழக்கத்திற்கு வந்தோமென்றால் ஆடாயிருந்தாலும் கோழியாயிருந்தாலும் அதை உயிருடனேயே துள்ளத்துடிக்க சிங்கம் புலிபோல கடித்தா தின்கிறோம்... இல்லையே. செத்தபின்தானே நாங்களும் அறுத்துத்தின்கிறோம்... எனவே செத்ததைத் தின்கிறவர்கள் தாங்கள் மட்டுமே என்று கிருந்ததியர் பீற்றிக்கொள்வதில் எந்த நேர்மையும் இல்லை. அதிலும் புல் பூண்டு போன்ற தாவரவகைகளை மட்டுமே மேய்கிற சுத்த சைவப் பிராணியான மாட்டைத் தின்கிற கிருந்ததியர்களே தாழ்த்தப்பட்டவரெனில், குப்பையையும் ஏன் மலத்தையும்கூட கிளறித் தின்கிற கோழியை கபாப் என்றும் சிக்கன் 65 என்றும் வகைவகையாய் வறுத்துத் தின்கிற எங்களை மிகவும் தாழ்த்தப்பட்டவர்களாக ஏன் கருதக்கூடாது என்பதற்கு தக்க விளக்கத்தைத் தருமாறு கிருந்ததியரையும் அரசையும் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது. எங்களிடம் வாலாட்டிய எத்தனையோ கிருந்ததியரை பட்டப்பகலில் வெட்டிப் புதைத்தவர்கள் நாங்கள் என்பதை தெரிந்திருந்தும் எங்களுக்கு பிணத்தை அப்புறப்படுத்தவோ புதைக்கவோ தெரியாது என்று வாதிடுவதில் கிருந்ததியர்களின் அறிவீனம்தான் வெளிப்படுகிறது.

சுடுகாட்டில் ஒருநாளைக்கு ஒன்றிரண்டு பிணங்களை எரிக்கிற இவர்கள் ஒரேநேரத்தில் விண்மணியில் 44 பேரை எரித்த செழித்த அனுபவம் கொண்டிருக்கும் எங்களைப் பார்த்து பிணம் எரிக்கத் தெரியுமா உங்களுக்கு என்று கேட்கிறார்கள். இப்படி வேண்டு மென்றே எங்களை ஆத்திரமூட்டி, எரிப்பதிலும் புதைப்பதிலும் எமக்கு நீண்டகாலமாக இருக்கும் அனுபவத்தை யெல்லாம் எங்கள் வாயாலேயே சொல்லவைத்து, பின் அதையே ஒப்புதல் வாக்குமூலமாக்கி கொலைக்கேசில் சிக்கவைக்கப் பார்க்கும் கிருந்ததியரின் பாசிச சூழ்ச்சியை முறியடிக்க கூட்டமைப்பு உறுதி கொண்டுள்ளது.

மணியாட்டும் கைக்கு மலக்கரண்டி பிடிக்கத் தெரியாது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்கள். கண் பார்த்தால் கை செய்யும் என்பது முன்னோர் வாக்கு. அப்படியிருக்கும் போது கிருந்ததியருக்கு ஆதரவான பத்திரிகையொன்று, உச்சந்தலையில் டும்மியும் தார்ப் பாய்ச்சி வேட்டியும் கட்டிக்கொண்டு கோயிலில் மணி யாட்டிக் கொண்டிருக்கும் ஒருவரை, ‘அந்த மணியை கர்ப்பஸ்தானத்தில் வீசியெறிந்துவிட்டு இங்கே வாரும், உமக்கு கேஐடியில் இடம் கிடைச்சிருக்கு’ என்று கூட்ட மைப்பினர் கூப்பிடுவதைப்போல கேலிச்சித்திரம் வெளியிட்டிருப்பதை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக் கிறது.

அதேபோல தப்பித்தவறி கிருந்ததியரல்லாத மாணவருக்கு கேஐடியில் இடம் கிடைத்து சேர்ந்து விட்டால் அவர்கள் மிகுந்த இளக்காரமாக நடத்தப்படுகின்றனர். சிறுசிறு தவறுகளுக்கும்கூட பொறுமையிழக்கும் பேராசிரியர்கள், ‘மக்கு.. மக்கு... நீயெல்லாம் மலமள்ள வரலேன்னு எவன் அழுதான்... உனக்கு சுட்டுப் போட்டாலும் பிணம் எரிக்க வராது. நீயெல்லாம் உன் குலத்தொழிலுக்குத்தான் லாயக்கு... இங்க வந்து ஏன் எங்க உயிரை எடுக்கிறே...’ என்று திட்டுவது வாடிக்கை யாக உள்ளது. இந்த அவமானம் தாங்காத கிருந்ததியரல் லாத குடும்பப் பிள்ளைகள் கேஐடியிலிருந்து தப்பித்து கள்ளத்தனமாய் ரயிலேறி பட்டணம் போய் இன்றைக்கு அமைச்சர்களாகவும் வியாபாரிகளாகவும் கோயில் குருக் களாகவும் வெறும் ஐநூறு ஏக்கர் கொண்ட பண்ணையாராகவும் காலந்தள்ள வேண்டிய இழி நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதெற்கெல்லாம் காரணம், கேஐடி பேராசிரியர்களில் பெரும்பாலோர் கிருந்ததிய ராய் இருப்பதே. எனவே பேராசிரியர் பதவியிலும் எமக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறோம்.

ஸ்கேவஞ்சர் படிப்பு மற்றும் வேலை மட்டுமல்லாது பறையடிப்பதிலும் எமக்கு இடஒதுக்கீடு தேவை என்று இப்போதே வலியுறுத்துகிறோம். தோலாலான பறையை நீங்கள் தொடக்கூடாது, தீட்டாகிவிடுவீர்கள் என்று எம்மை மிரட்டி தடுக்கப் பார்க்கின்றனர். தீட்டுப்படாத சாதி என்ற வெற்று கௌரவத்தை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன விரல் சூப்புவதா அல்லது வேறேதையாவது சூப்புவதா? எமக்கும் ஆடுமாடுகளின் தோல்களுக்கும் எந்தத் தொடர்புமே இல்லையா? காலணிகள், இடுப்பு பெல்ட், கடிகார வார், பிரயாணப் பை என்று எங்களிடம் இல்லாத தோல் பொருட்களா? அவற்றையெல்லாம் நாங்கள் தொட்டு பயன்படுத்தவில்லையா....?

அவ்வளவு ஏன்? எமது கடவுள்களும் முனிபுங்கவர்களும் ரிஷிகளும்கூட மான்தோலின் மீதமர்ந்து தவம் செய்வதை காலண்டர்களில் கண்டதில்லையா...? நாங்கள் மிகவும் விரும்பி வாசிக்கும் மிருதங்கத்திலும் தவிலிலும்கூட தோல் இருக்கிறதே? அதையெல்லாம் நாங்கள் தொட்டு அடித்ததால் இசை எழும்பாமல் போய்விட்டதா என்ன? மிருதங்கத்தை இப்படி வாசிக்க வேண்டுமானால் பறையை அப்படி வாசிக்கவேண்டும். வேண்டுமானால் யார் வீட்டு சாவிலும் நாங்கள் அடித்து ஆடி எங்கள் தகுதி, திறமையை நிரூபிக்கத் தயாராயிருக்கிறோம்.

ஆக எப்படிப் பார்த்தாலும் கிருந்ததியருக்கும் அவரொத்த சாதியனருக்கும் மேலாக நாங்கள் யாரும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு அவர்கள் செய்கிற எல்லாத் தொழில்களிலும் அதற்கான படிப்புகளிலும் எமக்கு இடஒதுக்கீடு தேவையென அரசையும் சொச்ச நீதிமன்றத்தையும் வலியுறுத்துகிறோம். ஓட்டு வங்கியை தக்கவைத்துக் கொள்வதற்காக அரசாங்கத்திலிருக்கும் கட்சியினர் இவ்விசயத்தில் பாராமுகமாய் இருக்கக் கூடும் என்பதால் நாங்கள் சொச்சநீதிமன்றத்தையே பெரிதும் நம்பியிருக்கிறோம். தாங்கள் வகிக்கும் பதவி, அதற்குரிய மாண்புகள் என்றெல்லாம் மயங்கி ஒருபால் கோடாமையோடு நீதிவழங்கவேண்டும் என்று அவர்கள் துணிந்துவிடக்கூடாது. துலாக்கோலை சற்றே தாழ்த்திப் பிடித்து சுயசாதிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கவேண்டும் என்று பணிந்து வேண்டுகிறோம்....

‘நீதிமன்றம் திடீரென பிரம்மாண்டமான கழிப்பறையாகி விடுகிறது. ஆர்டர் ஆர்டர் என்று மேசையைத் தட்டும் சுத்தி ஒரு மலக்கரண்டியாக மாறிவிடுகிறது. தனக்குத் தானே துக்கம் அனுஷ்டிப்பதுபோல இவ்வளவுகாலமும் உடுத்தியிருந்த கருப்பு அங்கியை உதறிவிட்டு காக்கி யுடுப்பு அணிந்து கனகம்பீரமாக நீதிபதி மலமள்ளும் அழகை நீதிதேவதையானவள் கண்ணைக் கட்டியுள்ள கறுந்துணியவிழ்த்து பொறாமையோடு ரசிக்கிறாள். பின் தன் கையிலிருக்கும் தராசுத்தட்டை வாகாகப் பிடித்து அதில் அவளும் மலமள்ளத் தொடங்குகிறாள்’ - இப்படி தகுதிக்கு மீறி கனவுகண்ட குற்றத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த பதினாறு நீதிபதிகளை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்திலிருந்தனர் நீதிபதிகள்.

கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஒரு ஸ்கேவஞ்சர் வரும்போது டவாலி ஒருத்தன் சைலன்ஸ் என்று அறிவித்தவுடன் யாராயிருந்தாலும் எழுந்துநின்று முகமன் கூறி ஸ்கேவஞ் சரை வரவேற்பதைப் போலவே நீதிமன்றத்துக்குள் நுழையும்போது தங்களையும் அவ்வாறு வரவேற்க வேண்டும் என்று கடந்தமாதம் அவர்கள் நடத்தியப் போராட்டம் பிசுபிசுத்துப் போனது. ‘நீங்க என்ன ஸ்கேவஞ்சரோ, இல்ல ஸ்வீப்பரா... ஆ•ப்டர் ஆல் ஒரு ஜட்ஜ்தானே... உங்களுக்கு எதுக்கு மரியாதை தரணும்?’ என்று அரசு மறுத்துவிட்டது. ஸ்கேவஞ்சர்கள்மீது காழ்ப்பிலும் பொறாமையிலும் மேலங்கி இன்னும் கருக்குமளவுக்கு பொங்கிக்கொண்டிருந்த நீதிபதிகள் ஸ்கேவஞ்சருக்கு இணையான சம்பளம் சலுகைகள், மரியாதை மானம் ரோஷம், கோடைவிடுமுறை, மூன்று தலைமுறையாக நீதிபதியாக இருந்தவரின் குடும்பத்தை கண்ணியமான மாற்றுத்தொழிலில் ஈடுபடுத்தும் வகையில் அவரது வாரீசுகளில் ஒருவருக்கு ஸ்கேவஞ்சர் வேலை, நீதிபதிகளுக்கும் காக்கிச் சீருடை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தனர்.

தம் வாரீசுகளுக்காவது காக்கியுடை அணியும் கௌரவம் கிடைக்குமா அல்லது அவர்களும் தங்களைப்போலவே காலகாலத்துக்கும் நீதிபதிகளாகவே இருந்து இப்படி கருப்பு உடைக்குள் புழுங்கிச் சாக நேரிடுமோ என்ற கவலையும் அவர்களை பீடித்துக்கொண்டது. எனவே போராட்டத்தை அவசரஅவசரமாக முடித்துக்கொண்டு பணிக்குத் திரும்பினர். கூட்டமைப்பிலிருந்த தமது சொந்தபந்தம் சிலரைத் தூண்டிவிட்டு பொதுநல வழக்கு தொடுக்கவைத்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். ஆனால் கட்டிங், குவார்ட்டர், ஆ•ப், •புல் என்று எந்த சைஸ் பெஞ்சில் ஏறி நின்று விவாதித்தாலும் தூய்மைப் பணியாளர் நியமனத் திட்டத்தில் நீதிமன்றம் கை வைக்கவே முடியாதபடி அது அரசியல் சட்டத்தால் காப்பு செய்யப்பட்டிருப்பது அவர்களுக்குப் புரிந்தது.

வெறுமனே கக்காநாட்டு சட்டப் புத்தகங்களுக்குள் உலும்பிக் கொண்டிருக்காமல் இதுபோன்ற பிரச்னைகளுக்கு பல்வேறு உலகநாடுகளின் நீதிமன்றங்களும் எவ்வாறு தீர்வுகண்டன என்பதை ஆராய்வதன் மூலம் கக்காநாட்டில் கிருந்ததியர் ஏகபோகத்திற்கு முடிவுகட்டி யாவரும் ஸ்கேவஞ்சராகவும் ஸ்வீப்பராகவும் மேன்மை யடையும் வழியை கண்டடைய முடியும் என்ற நம்பினர். இவர்கள் பெரிதும் நம்பியிருந்த- இடஒதுக்கீடு விசயத்தால் பரபரப்புக்கும் கலவரங்களுக்கும் ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும் பிரசித்திப் பெற்ற-அண்டைநாடான லிபரல் பாளையத்திலிருந்து அவர்களுக்கு விரும்பத்தக்க தகவல் எதுவும் கிடைக்கவில்லை. தொடங்கிய காலந்தொட்டு தொடர்ந்து இடஒதுக்கீட்டிற்கு எதிராகவே இயங்கி வரும் லிபரல்பாளைய நீதிமன்றங்களை இவ்விசயத்தில் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டியதில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

கருப்பு அங்கி அணிந்திருந்ததால் பெரியாரின் சீடர்களாயிருக்கக்கூடும் என்று நம்பி இந்த நீதிபதிகளிடம் ஆலோசனை கேட்க கள்ளத்தோணி ஏறி வந்த தமது மதியீனத்தை எண்ணி வெட்கப்பட்டனர் கக்காநாட்டு நீதிபதிகளும் •போரம் எகைன்ஸ்ட் இன்ஈக் வாலிட்டி அமைப்பினரும். ஆனால் இதனாலெல்லாம் அவர்கள் சோர்வடைந்து விடவில்லை. இறுதியில் தமக் கான நற்செய்தியை அவர்கள் இந்தியாவுக்குள்ளிருந்து கண்டெடுத்தனர்.

Mari Marcel Thekaekara எழுதிய Endless Filth என்ற புத்தகம், பலபட்டறை சாதி யினருக்கு போட்டியில்லாத ஒரு புதிய வேலைவாய்ப்புச் சந்தையை திறந்துகாட்டியது: பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டபோது அறிமுகமாகி நடைமுறையிலிருந்து பின் கைவிடப்பட்டத் தொழில் ஒன்றைப் பற்றிய குறிப்பு அப் புத்தகத்திலிருந்தது- மலம் கழித்தப்பின் கழுவிக் கொள்வதற்கு பதிலாக டிஷ்யூ காகிதத்தால் துடைத்துக் கொள்வதை வழக்கமாய்க் கொண்டிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், அந்த காகிதத்தை இங்கிலாந்திலிருந்து பெருஞ்செலவில் இறக்குமதி செய்ய வேண்டியிருந்ததாம்.

கொள்ளையடிக்கும் காசில் பெரும்பகுதியை இப்படி குண்டி துடைக்கவே செல விட்டால் கஜானா திவாலாகிவிடும் என்ற கவலை பீடித்ததாம் பிரிட்டிஷ் விசுவாசிகளுக்கு. பிரபு, இனி மேல் நீங்கள் பேப்பர் வாங்க வேண்டாம்... அதற்கு பதிலாக துண்டுத்துண்டாக கிழிக்கப்பட்டிருக்கும் இந்தத் துணியிலேயே துடைத்துக் கொள்ளுங்கள். தினமும் துணியை சுத்தமாகத் துவைத்து டெட்டாலில் அலசி காய வைத்து பக்குவப்படுத்தித் தர ஆட்களை நியமித்துவிட்டால் செலவு குறையும் என்று ஆலோசனை கூறினராம். மலம் துடைத்தத் துணியை யாராவது துவைப்பார்களா என்று பிரிட்டிஷ்காரர்கள் ஆச்சர்யமாய் கேட்க, இந்த மாதிரியான வேலைகளைச் செய்வதற்காகத்தான் எங்கள் நாட்டில் ஒரு சாதியையே வைத்திருக்கிறோம் என்று கூறி அருந்ததியர்களை மிரட்டி துவைக்கவைத்தனராம்.

இந்தியாவில் வழக்கொழிந்துவிட்ட ‘துணியால் துடைத்துக்கொள்ளும்’ அந்த தொழில்நுட்பம் ‘துதுது- துணியால் துடைத்து தூய்மைப்படுத்திக் கொள்ளும் திட்டம்’ என்ற புதுப்பெயரில் கிருந்ததியரல்லாதாரால் கக்காநாட்டில் பிரபல்யமாக்கப்பட்டது. என்ட்லெஸ் •பில்த் புத்தகத்தைப் படித்து ரகசியமாக இதற்கென பயிற்சி எடுத்திருந்ததால் அத்துணிகளை வெளுக்கும் புதிய வேலைவாய்ப்பு முழுவதையும் கிருந்ததியரல்லா தாரே கைப்பற்றிக் கொண்டனர்.

மலம் துடைத்தத் துணியை கையால் துப்புரவாக கசக்கித் துவைக்கும் அவர்களிடமே தமது கக்கூசை கழுவும் பணியையும் ஒப்படைக்கும் வாடிக்கையாளர்கள் பெருகத் தொடங்கினர். கிருந்ததியர்களைப் பார்த்து பொறாமையில் வெந்துகொண்டிருந்த பல்வேறு தரப்பினரும் புதிதாக களமிறங்கியுள்ள கிருந்ததியரல்லாதாருக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர். பிரிட்டிஷாருக்குப் போலவே கக்காநாட்டு மேட்டுக்குடியினருக்காக டிஷ்யூ தாள் இறக்குமதி செய்துவந்த வகையில் இதுகாறும் விரயமாகிக் கொண்டிருந்த அன்னியச் செலாவணி இனி மிச்சமாகப் போவதனாலும், மலம் துடைப்பதற்கென்று ஒவ்வொருவரும் துணி வாங்கியாக வேண்டிய நிலை உருவாகியுள்ளதால், நலிவடைந்து கிடக்கும் ஜவுளித் தொழில் புத்துணர்ச்சி பெறும் என்பதாலும் கக்காநாட்டு அரசாங்கமும் இந்த ‘துதுது’ தொழில்நுட்பத்திற்கு சாதகமாக நடந்துகொள்ளத் தொடங்கியது. நீராதாரம் சேதார மாவது தடுக்கப்படுவதாலும் டிஷ்யூ பேப்பர் பயன்பாடு முற்றாக ஒழிக்கப்படுவதால் காகிதக்கூழ் தயாரிக்க மரங்கள் வெட்டப்படுவது குறையுமென்பதாலும் இத்திட்டத் திற்கு சுற்றுச்சூழல் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

ஆண்டொன்றுக்கு சராசரியாக 5.7பில்லியன் டாலர் அளவுக்கு கழிவறைத்தாளுக்காக அமெரிக்கா செலவழிக்கிறது என்று இந்தியாவிலிருந்து வெளியாகும் தி இந்து நாளிதழ் வெளியிட்ட செய்தியுடன் யுஎஸ் அதிபரை கிருந்ததியரல்லாதார் கூட்டமைப்பினர் சந்தித்தனர். இத் தொகையில் பாதியளவுக்கு கொடுத்தாலும்கூட தங்களது சாதிகளைச் சார்ந்த இளைஞர்கள் 'துதுது' தொழில்நுட்பத் தோடு அமெரிக்கா வந்து பணியாற்றத் தயாராயிருப்ப தாக தெரிவித்தனர். தங்கள் சேவையால் மிச்சமாகும் காசைக் கொண்டு இன்னும் நாலு குண்டு செய்து ஈராக்மீது வீசலாமே என்று அவர்கள் கொடுத்த ஐடியாவால் குஷி கண்டுவிட்ட புஷ் உடனடியாக 'துதுது'வுக்கு ஒப்புதல் அளித்தார்.

அதன்படி கக்காநாட்டு கிருந்ததியரல்லாதார் அமெரிக்க கக்கூசுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கினர். வாடிக்கையாளரை கவர்வதற்காக, மலம் கழிக்கும் வரை கக்கூசுக்கு வெளியே காத்திருந்து மணிச்சத்தம் கேட்டதும் உள்ளேபோய் ஆசனவாயை இவர்களே துடைத்து விடுவது, மலம் கழிக்கிறவருக்கு போரடிக்காமலிருக்க செய்தித்தாள் வாசித்துக் காட்டுவது போன்ற புதிய உத்திகளைக் கையாண்டனர். சுத்தம் செய்கிற சாக்கில் அமெரிக்கர்களின் விதவிதமான பிருஷ்டங்களையும் குறிகளையும் காணும் வாய்ப்பினைப் பெற்ற இந்த பலபட்டறைச் சாதி இளைஞர்கள் எப்போதும் கிளுகிளுப் பான மனநிலையுடன் பணியாற்றிய விதம் அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

‘கையால் தொட்டுத் துடைக்கும் இன்பத்தை அனுபவியுங்கள்...’,‘கிருந்ததியரல்லதார் கக்கூசுகளைக் கழுவும் உரிமை கிருந்ததியரல்லாதாருக்கே’, ‘மரபுக்குத் திரும்பு வோம்... துதுது- வை விரும்புவோம்’, ‘தண்ணீர் மிச்சம்... தாளும் மிச்சம்’, ‘காலமெல்லாம் கிருந்தியர் கழுவிய உங்கள் கழிப்பறைகளைக் காண அலுப்பாயிருக்கிறதா...? நீங்கள் அணுகவேண்டிய முகவரி- கிருந்ததி யரல்லாதார் கூட்டமைப்பு’ என்பது போன்ற விளம்பரங் களால் கிருந்ததியர் நிலைகுலைந்துப் போயினர். உள் நாட்டில் எழுந்தப் போட்டியை சமாளிக்கமுடியாத அவர்கள் தமது பாரம்பர்யத் தொழில்களில் நீடிக்க முடியாமல் வேறுவேலைகளைத் தேடி அமெரிக்கா தவிர்த்த பிற நாடுகளுக்கு செல்லத்தொடங்கினர். மலத்துணி கசக்கும் நுணுக்கமறிந்த கிருந்ததியரல்லாதார் தலைமுறை தலை முறையாக செய்துவந்த அர்ச்சகர், நீதிபதி, மருத்துவர், அரசு ஊழியர் போன்ற இழிதொழில்களிலிருந்து விடுபட்டு படிப்படியாக கக்காநாட்டிலும் அமெரிக்காவிலும் ஸ்கேவஞ்சர்களாகவும் ஸ்வீப்பர்களாகவும் மேன்மை அடையும் காலம் கனிந்துவிட்டது.

சுபம்.
சிறுகதை- ஆதவன் தீட்சண்யா , புதுவிசை இணைய இதழ்

"முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்கிற பழமொழிக்கு ஏற்ப.. தமிழகத்தில் துக்ளக் தர்பார் தொடங்கி விட்டது. "ஒரு அழுக்கு இன்னொரு அழுக்கை அகற்றாது” என்றார் நபிகள் நாயகம். நிகழ்காலத் தவறுகளின் மீதுள்ள கோபத்தில், கடந்த காலத் தவறு ஆட்சிக்கு வந்துள்ளது.

தன்னை மகாராணியாக கருதிக்கொள்ளும் ஜெயலலிதாவிற்கு, தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்பதை நினைவுப்படுத்த வேண்டிய நேரம், இவ்வளவு சீக்கிரம் வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சமச்சீர் கல்வித்திட்டம் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை என்பதைக் காரணம் காட்டி அவசர அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி அரசு நிறுத்தி வைத்துள்ளது.

மனுதர்மம் எப்படி நால்வருணம் என்கிற சாதிய அமைப்பைக் காப்பற்றுகிறதோ, அதைப் போலவே நான்கு வகையான கல்வி முறைகள் இங்கே காப்பற்றப்படுகின்றன. அரசுப் பள்ளிகள், மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இண்டியன், ஓரியண்டல் என நான்கு வகையான பாடத்திட்டங்கள், தனித் தனியாக இயங்குகின்றன. குழந்தைகள் விசயத்தில் காட்டப்படும் இந்த அநாகரிகமான வேறுபாடு அருவெறுக்கத்தக்கது. அதை மாற்ற முனைந்த சமச்சீர் கல்வித்திட்டத்தை ஜெயலலிதா அரசு நிறுத்தி வைத்துள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டம் என்பது திடீரென்று முளைத்த மழை நேரத்துக் காளான் அல்ல. அதற்காக கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பத்தாண்டு காலம் போராடி இருக்கிறார்கள். அதன் விளைவாக, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் 2006 ஆம் ஆண்டு ஒரு குழுவை அன்றைய கலைஞர் அரசு அமைத்தது. அந்த குழு மாவட்டந்தோறும், பள்ளிக்கல்வியின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது.

பின்னர், 2007 இல் முன்னாள் மாநகராட்சி ஆணையர் விஜயகுமார் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஏற்கனவே நியமிக்கப்பட்ட முத்துக்குமரன் குழு அறிக்கையின் கருத்துக்கள், பரிந்துரைகள் ஆகியவற்றின் நடைமுறை சாத்தியங்களை ஆராய்ந்தது. இதன் பிறகு, பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து தெரிந்து வர 2008 ஆம் ஆண்டு ஒரு கல்வியாளர் குழுவை அரசு நியமித்தது.

பின்னர் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, 26.08.2009 அன்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நான்கு விதமான பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டது. சட்ட வடிவு கொண்டு வரப்பட்டது. அதன் முதல் கட்டமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி 2010 இல் கொண்டு வரப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு 2011-இல் கொண்டு வரப்படும் என முந்தைய அரசு அறிவித்து இருந்தது.

அதிகாரம் தலைக்கு ஏறிய சில தினங்களுக்குள்ளேயே ஜெயலலிதா சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்து விட்டார். ஏழைகளுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் ஒரே கல்வி என்பதை ஏற்றுக் கொள்ள அவரின் பார்ப்பனீய ஆதிக்க மனம் மறுக்கிறது. எல்லா பொதுத் துறை நிறுவனங்களும் தனியார்மயமாக மாறும் அவலமான உலகமய சூழலில், தனியார் கல்வி நிறுவனங்களின் லாப வெறிக்கு துணை போயிருக்கிறது இன்றைய அரசு.

உயர்நீதி மன்றத் தீர்ப்பும், மக்களின் ஆவேசமும் மட்டுமே இதற்கு மாற்றான சூழலைக் கட்டமைக்க முடியும். ”ஆடுகளும் மாடுகளும் இன்று தான் அமைச்சர்கள் ஆயினர்” என்ற கண்ணதாசன் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் ஆளுமையற்றவர்களை ஜெயலலிதா அமைச்சர்களாக்கி உள்ளார். ஜெயலலிதாவின் அமைச்சர்கள் யாரும் 150 கல்வியாளர்களை கொண்டு நியமிக்கப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தை நிராகரிக்கும் தகுதி படைத்தவர்கள் இல்லை.

பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் பலரும் இதற்கு கண்டணம் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்து முன்ணணித் தலைவர் இராம.கோபாலன் சமச்சீர் கல்வித்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளார். இந்த முடிவு பிற்போக்குத் தன்மை வாய்ந்தது என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. பாடத்திட்டத்தில் ஆட்சேபணைக்குரிய பகுதி இருந்தால், அதை மட்டுமே நீக்க வேண்டுமே தவிர, ஒட்டு மொத்தமாக நீக்குவது என்பது தவறான முன்னுதாரணம் ஆகும்.

'அரசு மதுபானம் விற்பது தவறு’ என ஒட்டுமொத்தமாக மதுவிலக்கு கொண்டு வருவதில் அதிரடி முடிவு எடுப்பாரா ஜெயலலிதா? செய்ய மாட்டார். ஏனெனில், அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பால், இலவசத் திட்டங்கள் என்னும் ஏமாற்றுத் திட்டங்களை நிறுத்த வேண்டி வரும். இதில் மட்டும் கலைஞர் அரசின் பிற்போக்குக் கொள்கைகளைப் பின்பற்றுவது ஏன்?

'ஒரு விசயம் உருப்படாமல் போக வேண்டும் என்றால் அதை கிணற்றில் போடு. இல்லையென்றால் அதை விசாரிக்க கமிசன் போடு' என்றார் இராஜாஜி. ஜெயலலிதா கிணற்றில் போட வழியின்றி வல்லுநர்கள் குழுவைப் போட்டிருக்கிறார். அச்சடித்த புத்தகங்கள் குழந்தைகளின் கனவுகளில் மண் அள்ளிப் போட காத்திருக்கின்றன. மக்கள் வரிப்பணம் வழக்கம் போல 200 கோடி வீணடிக்கப்பட்டிருக்கிறது.

பெற்றோர்களை போராடத் தூண்டுகிறது ஜெயலலிதா அரசு. மக்களின் போராட்டம் ஒரு போதும் தோற்றுப் போவதில்லை என்பதை நிரூபிக்கும் காலம் மீண்டும் கூடி வந்திருக்கிறது. மாணவர்களின் எதிர்காலம் பற்றிய விசயத்தில் அரசின் இத்தகைய மோசமான போக்கு நீடிக்குமானால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.

- அமீர் அப்பாஸ் ( israthjahan.ameer@gmail.com)
குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில், மோடியின் கரம் படிந்துள்ளது என்பதற்கு பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு சான்றுகள் வெளியாகியுள்ளன.

அந்த வரிசையில், குஜராத் கலவரம் நடந்தபோது அங்கு மூத்த போலீஸ் அதிகாரியாக இருந்த வரும், தற்போது உளவுத்துறையில் பணியில் இருப்பவருமான சஞ்சீவ் பட் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமான பத்திரத்தில்,

“குஜராத் கலவரத்துக்கும், முதல் மந்திரி நரேந்திர மோடிக்கும் தொடர்பு உண்டு. கலவரம் நடந்த போது நான் அங்கு பணியாற்றி னேன். அப்போது நரேந்திரமோடி, தனது வீட்டில் போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி னார். இந்த கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, குஜராத்தில் நடந்து வரும் கலவரத்தை கண்டு கொள்ள வேண்டாம். இந்துக்கள் தங்கள் கோபத்தை தீர்த்துக் கொள் ளட்டும். அதற்கு அனுமதியுங்கள். கலவரத்தால் பாதிக்கப்படுவோ ருக்கு ஆதரவாக செயல்பட வேண்டாம். அவர்களது கூக்கு ரலை கேட்க வேண்டாம் என்று சொன்னார்'' என குறிப்பிட்டிருந் தார்.

இவரது இந்த அதிரடி அபிட விட் மோடியின் முகத்திரையை யும், புலனாய்வுத் துறையின் முகத் திரையையும் ஒரு சேரக் கிழித்தது. இதை மோடி கூட தாங்கிக் கொண் டார். ஆனால் மோடியின் ஊதுகுழ லான தினமலருக்கு தாங்க முடிய வில்லை போலும். அது டவுட் தனபாலு என்ற பகுதியில் இப்படி கிண்டலடித்திருக்கிறது.

குஜராத் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட்:

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத் தால், இந்துக்களிடையே கொந்த ளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. இத்தகைய சம்பவம் இனி நிகழாத வாறு, முஸ்லிம்களுக்கு பாடம் கற் பிக்க நினைக்கின்றனர். அவர்களது கோபத்துக்கு தடை விதிக்காமல், கண்டும், காணாமல் இருக்கும்படி போலீஸ் அதிகாரிகளிடம் நரேந்திர மோடி கூறினார்.

டவுட் தனபாலு:

இன்னும் பெட்டரா எதிர்பார்க்கி றேன்... “எல்லா போலீஸ்காரங்க கையிலயும் துப்பாக்கியைக் கொடுத்து, முஸ்லிம்களை எங்கே பார்த்தாலும் சுட்டுக்கொல்லச் சொன்னாரு'ன்னு சொல்லுங்க... வாய்க்கு வந்தபடி சொல்றதுன்னு ஆகிப்போச்சு... எவ்ளோ சொன்னா என்ன...? என்கிறது தினமலர்.

அதாவது அந்த அதிகாரி வாய்க்கு வந்தபடி சொல்கிறாராம். வருத்தப்படுகிறது தினமலர். அந்த அதிகாரி தாக்கல் செய்துள்ள மனு வில் மோடி குறித்து சொன்னவை கள் உண்மையா? அல்லது பொய்யா? என்று ஆராய்வதற்கு நீதிமன்றம் இருக்கிறது. அதற்குள் அந்த அதிகாரியை பொய் சொல்ப வராக வாய்க்கு வந்தபடி தினமலர் எழுத வேண்டிய அவசியம் என்ன? இதற்கு வேரூன்றிய இந் துத்துவா சிந்தனையே தவிர வேறென்ன காரணமிருக்க முடி யும்?

அடுத்து இதே போன்று மோடி மீது குற்றம் சாட்டிய இன்னொரு வரையும் சாடியுள்ளது தினமலர். அதை கீழே படியுங்கள்;

நில மோசடி வழக்கில் சிக்கி, தற்போது சிறையில் உள்ள பிரதீப் சர்மா:

குஜராத் கலவரம் நடந்தபோது, நான், ஜாம்நகர் நகராட்சி கமிஷன ராக இருந்தேன். என் சகோதரர் குல்தீப் சர்மா, போலீஸ் அதிகாரி யாக பணியாற்றினார். அப்போது, முதல்வர் மோடி அலுவலகத்தில் இருந்து, ஓர் அதிகாரி என்னைத் தொடர்பு கொண்டு, “கலவரக்காரர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என, சகோதரரிடம் தெரிவிக்கும்படி கூறினார்.

டவுட் தனபாலு:

மோசடி வழக்கு தொடர்பா சிறையில இருக்கற ஆட்கள் எல் லாம் மோடி மேல குற்றம் சொல்ற அளவுக்கு நிலைமை போயிடுச்சு, பாருங்க... உள்துறை அமைச்சரான அண்ணன் சிதம்பரம், இவருக்கும் ஒரு பாராட்டு தெரிவிச்சா, தேவலை...! என்கிறது தினமலர்.

மோசடி வழக்குல சம்மந்தப் பட்ட ஒருத்தர் சொல்லும் எல் லாமே பொய்யாகி விடுமா? அல்லது மோசடி வழக்கில் சம்மந் தப்பட்டவர்களின் சாட்சியம் வேறு வழக்குகளில் ஏற்கப்படாது என்று ஏதேனும் சட்டமிருக்கிறதா? தினம லர் சொன்னால் நன்றாக இருக்கும்.

அதோடு உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் சந்தடி சாக்கில் சாடியுள்ளது தினமலர். மோடி அப்பழுக்கற்றவர் என்று தினமலர் நம்பினால் இருந்து விட்டுப் போகட்டும். அது அதன் சொந்த விருப்பம். அதற்காக தான் தூய்மை யாளர் என்று நம்புபவரை எவரும் குற்றம் சாட்டக்கூடாது என்ற கோணத்தில் எல்லோர் மீதும் விழுந்து பிறாண்டுவது ஒரு பத்தி ரிக்கைக்கு அழகல்ல.

யார் குற்றவாளி? யார் வாக்கு மூலம் உண்மையானது என்பதை ஆய்வு செய்யத்தான் நீதிமன்றம் உள்ளது. நீதிமன்றத்தின் வேலையை தினமலர் செய்யாமல் இருப்பதுதான் அதற்கு நல்லது. உண்மையின் உரைகல் என்று தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் தினமலர், மற்றவர்களின் உண்மைக் குரலை ஊனமாக்க முயல்வது ஏன்? உண்மை கசக்கிறதா?


-முகவை அப்பாஸ்

நேர்காணல்: "ஆதிக்கங்களிலிருந்து நழுவுவதும், அவற்றைக் காட்டிக் கொடுப்பதும்தான் என்னைப் பொறுத்தவரை கலை"
லீனா மணிமேகலை


-நன்றி வல்லினம்

http://www.vallinam.com.my/issue27/interview.html

கவிஞர், இயக்குநர், களப்பணியாளர் என இடையறாது இயங்கிக்கொண்டிருப்பவர் லீனா மணிமேகலை. கடந்த பத்து வருடங்களாக மாற்று சினிமாக்களையும் ஆவணப்படங்களையும் உருவாக்கிவருபவர். எளிய மக்களின் பங்களிப்பைக் கொண்டே அதன் உச்சமான சாத்தியங்களில் மக்கள் பங்கேற்பு சினிமாக்களை உருவாக்குபவர். இடது சாரிக் குடும்பச் சூழலில் வளர்ந்த லீனா இன்று பெரியாரியம், அம்பேத்கரியம் எனது தனது பார்வைகளை வளர்த்தெடுத்து முன்னே செல்பவர். தனது கருத்துகளை எழுத்தின் மூலமும் காட்சி ஊடகங்களின் வழியேயும் வெளிப்படுத்தி வருகிறார். அண்மையில் 'செங்கடல்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வரும் அகதிகள் மற்றும் இலங்கைக் கடற்படையாலும் கொல்லப்படும் தமிழக மீனவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டிருக்கும் இப்படம் தணிக்கை குழுவினரால் தடைசெய்யப்பட்டுள்ளது. அந்தத் தணிக்கையை எதிர்த்து விடாப்பிடியாகப் போராடிக்கொண்டிருக்கும் லீனா வல்லினத்தோடு தீர்க்கமாகவும் உற்சாகமாகவும் உரையாடினார்.

இன்றைய உங்களின் கடைசி நிமிட வாழ்வை பகிர்ந்து கொள்ள முடியுமா?

ம்

பேட்டி கேள்வி ஒன்று
கேளுங்க நவீன்

இந்த நிமிடம்
அந்த சாளரத்தின் கம்பிகள்
பிரித்த என் உடல்
நான்கைந்து பிம்பங்கள்

சூனியக்காரி
ஆர்வத்தில் எட்டிப்பார்க்க தலையை நீட்டியவள்
சிதறி செத்தாள்

பிணத்தைக் கண்டும்
குனிந்த மற்றொருவன்
மண்டை மோதி
மோசக்காரி
முணங்கி செத்தான்

64 தந்திரங்கள் தெரிந்தவள்
பணம் பறிப்பாள்
காரியத்திற்கு படுப்பாள்
எல்லாம் தெரிந்தவள் போல நடிப்பாள்
எண்ணிக் கொண்டே ள் விகுதியை
அழுத்தியதில் நாக்கறுந்தவன்
முனை சறுக்கி செத்தான்

நச்சுப் பாம்பு
தீவினை வைப்பவள்
செய்தி பரவியதில்
கூடிய மக்கள்
நெரிசலில் சன்னல் வெடித்து
மொத்த பேரும் செத்தனர்

காட்சி 1 2 3 4 11 1 1
அலுத்துப் போய்
சந்தைக்கு திரும்பினேன்

மரண பீதி சூழ்ந்ததில்
கறுப்புத் துணி வியாபாரம் சூடு பிடித்திருந்தது
கண்களுக்கென்று வித விதமான காப்பீட்டுத் திட்டங்கள்
சன்னல் பழுதுபார்ப்பவர்கள்
பெருத்திருந்தார்கள்
30 நாட்களில் நீங்களும் கவிதை எழுதலாம்
எல்லோருக்கும் பிடித்த மாதிரி என்பதை சற்று உரக்க கூவினான்
புத்தகம் விற்றுப் போன தம்பி

2. உங்களின் கலை வெளிப்பாட்டிற்கான முதல் தருணத்தை நினைவு கூற முடியுமா?

வயதுக்கு வந்த நேரம், என் அம்மா அருகில் இல்லை, கிராமத்திற்கு எதோ காது குத்திற்குப் போயிருந்தார்கள். அப்பாவிடம், " கிலி பிடித்த குரலில், அப்பா, பாவாடையெல்லாம் ஒரே ரத்தம்" என்று சொன்னேன். வெரிகுட் என்றவர் அம்மாவுக்குத் தொலைபேச மொத்தக் குடும்பமும் பரபரப்பாக கிளம்பி வந்துக் கேட்ட ஒரே கேள்வி, நீ ரத்தத்தை முதன்முதலாக எப்ப பார்த்தாய், சரியான நேரத்தை சொல்லு, சாத்திரம் எழுதனும் என்று! இன்று வரை இதற்கு என்னிடம் பதிலில்லை. அப்புறம் அவர்களாகவே என் அப்பாவிடம் சொன்ன நேரத்தை வைத்து எதோ கணித்து ஜோசியருக்கு நோட்டு எழுதினார்கள்.

உங்கள் கேள்வி ஏதோ இதைத் தான் நினைவுக்கு கொண்டு வருகிறது.

3.உங்களின் தொடக்ககால எழுத்தின் வகை என்னவாக இருந்தது? இன்றைய மன நிலையில் அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

என் தொடக்க கால எழுத்து, முதல் காதலின், அந்த காதல் தந்த முத்தம் போன்றவை. என் குழந்தமை வாசம் கூடியவை. என் சதுரகிரி மலை போல, அத்தியாறு போல, புன்னை மரம் போல, மாவூத்து போல நூற்றாண்டுகள் கடந்தும் நிற்கும் ஒரு சொல்லை எழுதிவிட வேண்டும் என்ற வேட்கை கூடிய முயற்சி. அந்தந்த காலகட்டங்களின் சாட்சி தானே எழுத்தும்.

ஒருவித தூய நம்பிக்கைகள் நிறைந்தது என் தொடக்ககால கட்டம் என்று இப்போது நினைத்துப் பார்த்தால் தோன்றுகிறது.


4.பெரும்பாலும் ஆண்களே இயங்கி கொண்டிருக்கும் இலக்கியத்திலும் திரையிலும் நீங்கள் மிகத் தீவிரமாகவே இயங்கி வருகிறீர்கள். தொடக்கத்தில் அதன் சவால்கள் எத்தகையதாக இருந்தது?

பிறந்த குழந்தையை ஆணா, பெண்ணா என்பதை இடுப்புத் துணியை விலக்கிப் பார்த்து தெரிந்துக் கொள்வார்கள்,. அதே மனநிலை தான் இலக்கியத்திலும், கலைத்துறையிலும் நீடிக்கிறது. சதா பிரதியின் ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது, எங்கிருந்து உள்ளேறுவது, எப்படி இயங்குவது என்பதை துப்புத் துலக்கி கொண்டிருக்கிறேன். கிடைத்தால் சொல்கிறேன். பாலுறுப்புகளின் வடிவம் பார்த்து ஆணா, பெண்ணா, வேறா, ஆண்பிரதியா, பெண் பிரதியா , வேறு பிரதியா என்று வரையறை செய்து விட முடியாது என்பதை என் தீவிரத்தை தொடர்வதற்காக நம்ப விரும்புகிறேன் .

5.இலக்கியத்திற்கான அல்லது திரைப்படத்திற்கான உங்கள் தொடக்ககால ஆயர்த்தங்கள் அல்லது பயிற்சிகள் பற்றி கூறுங்கள்?


உரையாடலில் எனக்கு தீவிர மோகம். அதுவே என் இன்றைய எல்லா ஆயுத்தங்களின் அடிப்படையும். பலவிதமாக, பல்வேறு உயிர்களிடம், என்னை சுற்றியுள்ள இருப்புடனும், இன்மையுடனும், உரையாடும் முயற்சியாக எழுத்து, பிம்பம்,எண்ணம், செயல், கருத்து, அரசியல்,வாசிப்பு, பிரக்ஞை, இன்ன பிறவையையும் பார்க்கிறேன். சினிமாவுக்கென்ன நூற்றி சொச்சம் வயது தானே ஆகிறது. எழுத்துக்கு வயது சில ஆயிரங்கள் சொச்சம். நமக்கு நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் வயதென்கிறார்கள். தொழில் நுட்பம் எதுவும் வசப்படாத போதும் உரையாடிக் கொண்டு தானே இருந்தோம்.புதிய சொல்லென்பதோ, பிம்பமென்பதோ ஏதுமில்லை. நினைவோடையின் ஒரு கூழாங்கல்லைப் பொறுக்கியதோடு , அதைக் கொண்டே என் கண்ணாடியை அடித்து உடைக்காத வரை ஒரு புதிய உரையாடலை தொடங்கியபடி இருப்பேன்.

தொடக்ககால ஆயுத்தங்கள் என்று சொல்லப் போனால், என் பள்ளிப் பருவத்தில் கம்யூனிஸ்ட் மேடைகளில் இயக்கப் பாடல்கள் பாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில், பாடியே புரட்சியை கொண்டு வந்துவிடலாம் என்று தீவிரமாக நம்பியிருக்கிறேன். மணிக்கணக்கில் தலைவர்கள் பேசி மக்களை கலைக்கிறார்கள், என் பாடலில் மக்களை திரட்டி ஒன்றுபட வைக்க முடியும் என்ற உறுதியோடு தான் சொற்களைப் போட்டு எழுதி பாடித் திரிவேன். எனக்கு தோழர்கள் கே.ஏ.குணசேகரனும், எம்.பி.சீனிவாசனும் தான் புரட்சிகர இந்தியாவை சாத்தியமாக்கக் கூடியவர்கள் என்று தோன்றும். சொற்களின் மீதும், அவற்றின் கூடிய இசையின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தியது என் பள்ளி பருவ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கலை இலக்கியப் பெருமன்ற மேடைப் பாடல்கள் தாம். பாரதி, பாரதிதாசன் போன்று மக்கள் கவியாக வேண்டும் என்ற கனவுமிருந்தது. அவையில் பேச்சாளியாய், என் முன்னே கூடியிருக்கும் பார்வையாளர்களுக்கு முன் “அறிவை விரிவு செய், அகண்டமாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்று பாரதிதாசனாய் உறுமும் போது கவிதையில் கட்டுண்டிருந்தது என் குழந்தை மனம். பொறியியல் கல்லூரி காலங்களிலும் தமிழ்த்துறை மாணவி போல போய் வா கடலலையே என்று கவிதை எழுதிக் கொண்டு கவியரங்கங்களில் பங்கு கொண்டு அலைவதை வகுப்புத் தோழர்கள் கேலியும் கிண்டலும் செய்வார்கள். தொழில்முறை படிப்பென்பதால் கடுமையான கெடுபிடிகள் இருக்கும். வகுப்புகளை, பிராக்டிகல் வொர்க்‌ஷாப்புகளை நண்பன் ஒருவனுக்கு கவித்துவமான காதல் கடிதம் எழுதுவதற்காக தியாகம் செய்திருக்கிறேன். பின்னாளில் இலக்கியத்தை தேர்வு செய்தது,, கவிதையை தீவிரமாக பயற்சி செய்ய வேண்டிய துறையாகவும் மேற்கொண்டது என்பதெற்கெல்லாம் வித்தாக என் பதின்பருவ ஆர்வங்களும் நம்பிக்கைகளும் இருந்திருக்க முடியும்.

கி.மு. கி.பி என்பதுபோல எனக்கும் அப்பாவிற்கு முன், அப்பாவிற்குப் பின் என்ற காலகட்டங்கள் உண்டு. என் அப்பா தமிழ்ப்பேராசிரியர், இயக்குனர் பாரதிராஜாவின் திரைப்படங்களில் முனைவர் பட்டம் பெற்றவர். எங்கள் வீட்டு வி.சி.பியில் சதா பதினாறு வயதினிலேயும், நிழல்களும், கிழக்கே போகும் ரயிலும் ஓடிக் கொண்டே இருக்கும், ஃபிலிம் சொசைட்டி திரையிடல்களில் அப்பா மடியில் தூங்கியது போக பார்த்த படங்களும் நிழல் நினைவுகள். சினிமா கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து தரச்சொல்லுவார் அப்பா. திக்கித் திணறி டிக்‌ஷனரிகளை கிழித்து தோராயமாக செய்து தருவேன். வாயில் நுழைய முடியாத சினிமா சொல்லாடல்கள் மனதில் சும்மா பெயருக்காவது பதிந்தது அப்போது. மற்றபடி அப்பா தேர்வு செய்யும் படங்களை தான் நான் திரையரங்குகளில், அதுவும் அவரோடு கூடத் தான் போய் பார்க்க முடியும். வளர்ப்பில் அவர் ரொம்ப கறார்.



கல்லூரி காலங்களில் மாணவர் இயக்கங்களோடு இணைந்து கிராமங்களில் தெரு நாடகங்கள் போட்ட அனுபவமும் அது தந்த பாடங்களும் தான் மக்கள் சினிமாவை நோக்கி என்னைத் தள்ளியது எனலாம். பின்னர் வெகுஜன சினிமாவில் இயக்குனர்கள் பாரதிராஜாவோடும், சேரனோடும் கூட பெரிதும் ஒவ்வாமல் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் போனது கூட தற்செயலானதல்ல. நானறிந்த சமூகமாக சினிமா இல்லை என்பதும் ஒரு நிலப்பிரபத்துவ செட்அப்பாக சினிமாத் துறை எனக்கு தெரிந்ததும், எனக்கான தனியான சினிமா பயணத்தை தொடங்கினேன்


6.எது உங்களின் சிந்தனை பரிணாமத்திற்குக் காரணமாக இருந்தது?

எம் சமூகத்தில் ஏன் சிலருக்கு மட்டும் உணவு கிடைக்கிறது? ஏன் பலரின் உயிருக்கு மதிப்பில்லை? ஏன் ஒரு சாரார் மற்றும் சமமாக நடத்தப் படுவதில்லை? ஏன் ஒடுக்கப்படுகிறார்கள்? இந்த ஏற்றத்தாழ்வின் ப்ரோக்ராம்மிங்கை யார் செய்கிறார்கள்? என்ற கேள்வி தான் நம் எல்லோருடைய சிந்தனைக்கு வித்தாக இருக்க முடியும் என்று நம்புகிறேன். பன்னாம் பெரிய தத்துவங்கள், கருத்தியல்கள், வரலாறுகள் எல்லாம் அடிமை என்றொருவர் இருப்பதால் தானே இருக்கின்றன.

7.இலக்கியத்தில் அல்லது இயக்கத்தில் யாரை முன் மாதிரியாகக் கொள்கிறிர்கள்?

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும், பெண் ஏன் அடிமையானாள் புத்தகமும் படிக்க கிடைக்காமலிருந்திருந்தால் இவ்வளவு இறுமாப்போடு உங்களோடு உரையாடிக் கொண்டிருக்க மாட்டேன். பெரியார் என்ற கிழவன் இல்லையென்றால், பெண் என்பவளுக்கு இருப்பு மட்டுமல்ல, நினைவே மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் அவ்வையாரையும், வெள்ளிவீதியாரையும், காரைக்கால் அம்மையையும், ஆண்டாளையும், முத்துப்பழநியையும்,இன்னும் என் மூதாய்களை தேடிப் பகுத்து அறிந்துக் கொண்டிருக்க மாட்டேன். என் முன்னோரை தெரிவு செய்யும் வாய்ப்பு இல்லையென்றாலும், என் முன்னோடியாக பெரியாரை தெரிவு செய்திருக்கிறேன்.

இடதுசாரி குடும்ப பிண்ணனி என்பதால் கார்க்கியின் தாய் நாவல் தான் நான் வாசித்த முதல் இலக்கியப் பிரதி. புரட்சியில் இளைஞர்கள், ஜமீலா, முதல் ஆசிரியன், செம்மணி வளையல் போன்ற சோவியத் இலக்கியமும், தாமரையும், பாரதி –பாரதிதாசன் பட்டுக்கோட்டை கலயாண்சுந்தரனாரும் என் தந்தை எனக்கு அறிமுகப்படுத்தியவை. கல்கியும், சாண்டில்யனும், பாலகுமாரனும், ரமணிசந்திரனும் என் அம்மாவின் அலமாரியில் திருடியவை. சுயதேர்வு வந்த பிறகு ஜெயகாந்தனும், அம்பையும் தான் என் ஆதர்ச எழுத்தாளுமைகள். சந்திக்கிற ஆண்களில் ஹென்றியைத் தேடும் நோய் பிடித்து ஆட்டிய காலம் என் பதின் பருவம். அம்பையின் சிறகுகள் முறியும் படித்துவிட்டு நிம்மதியில்லாமல் வெறிபிடித்து அலைந்த இரவுகள் அநேகம். சிறுகதையில் மாண்டோ பெரியவனா, கடவுள் பெரியவனா என வியந்ததுண்டு. கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், புதுமைப் பித்தன், ஜி.நாகராஜன், அசோகமித்திரன், லா.ச.ரா,வண்ணநிலவன், வண்ணதாசன், ஆதவன், சுந்தர ராமசாமி போன்றோரை முறையாக வாசித்தது ஜெரால்டோடு கூடிய நட்பு காலத்தில் தான். தமிழ் மாணவரென்பதால் ஜெரால்டு காதல் நிமித்தம் என் நூலகராகவும் உதவி செய்தார்.

கவிதையில் பிரமிள், கலாப்ரியா, ஆத்மநாம், சி.மணி, நகுலன், பிரம்மராஜனின் மொழிபெயர்ப்புகள், சுகுமாரன், மனுஷ்யபுத்திரன்,யவனிகா ஸ்ரீராம், ஹெச்.ஜி,ரசூல், ரிஷி, சுகந்தி சுப்ரணியன் என்று ஒரு வாசிப்பு தடம் எனக்குண்டு.

ஈழ இலக்கியத்தில் புனைவில் ஷோபா சக்தியும், கவிதையில் சேரன், வ.ஐச.ஜெயபாலன், சிவரமணியும், கட்டுரைகளில் அ.முத்துலிங்கமும், மொழியியலில் நுஃப்மானும், எனக்கு நெருக்கமானவர்கள்.

ஆங்கில வழி தாஸ்தாவெஸ்கி,டாட்ஸ்டாய், செகாவ், மிலன் குந்தரா, பாமுக், மார்குவெஸ், கமலா தாஸ், மஹாஸ்வேதா தேவி,அருந்ததி ராய், அமிதவ் கோஷ், ருஷ்டி, கிரண் தேசாய், காலத் ஹுஸைனி, சில்வியா பிளாத், செக்ஸ்டன், சிக்சூ, உல்ஃப், கேதெ ஆக்கர், அக்மதோவா, கொலண்டாய், ட்ரின் மின் ஹா, காஃப்கா, ஜெர்மைன் க்ரீர் ஆகியவர்களையும் தரிசித்ததுண்டு.

சம காலத்தில், நான் மிக நேசிக்கும் கவிஞர்கள் லஷ்மி மணிவண்ணன், பாலை நிலவன், கண்டராதித்தன், மாலதி மைத்ரி, செல்மா ப்ரியதர்ஷன், இசை, இளங்கோ கிருஷ்ணன் சிறுகதை எழுத்தாளர்கள் அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா, அசதா நாவலாசிரியர்கள் பாமா, ஜோ.டி.குரூஸ், ஜாகிர் ராஜா.

அ.மார்க்ஸும், மார்க்ஸின் எழுத்தும் என்றென்றைக்கும் என்னை ஒரு கலகத்திற்கு தயார்படுத்திக் கொண்டேயிருக்கும் உந்துசக்திகள். சாஹிப் கிரான் சுயத்தை இழந்து அன்பிற்காக நிற்கும் என் இலக்கிய தோழமை.

இப்படி எல்லோரும், எல்லாமும் என்னை ஏதோ வகையில் தொடர்ந்து இயங்க வைக்கும் முன்மாதிரிகள் தாம்.

8.இயக்குனர் அல்லது கவிஞர் எனும் ஆளுமைகளைத் தவிர்த்து வேறெந்த
மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறீர்கள் ?
(கஞ்சா கடத்துவது மற்றும் அடிப்பது, தரகு வேலை பார்ப்பது, பிச்சை எடுப்பது, நண்பர்களுடன் குடித்து விட்டு ரோட்டில் விழுந்துக் கிடப்பது, இவை தவிர தான் வாசிப்பதும், எழுதுவதும், படைப்பதும். ஏங்க உங்களுக்கே ஓவராகத் தெரியவில்லையா?)

இலக்கியம் மற்றும் சினிமா வாசிப்பும், பயணமும், கலை-கோட்பாடு குறித்த உரையாடல்களில் ஒரு மாணவியாகப் பங்கேற்பதும், திரைப்பட விழாக்களுக்கு செல்வதும், அரசியல் கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் தேடி விரும்பி படிப்பதும் தவிர மிச்ச நேரத்தில் தான் எழுதுவதும், திரைப்படங்கள் உருவாக்குவதிலும் செலவிடுகிறேன். மாற்று சினிமா களத்தில் இந்தியா முழுவதும் தீவிரமாக பயணம் செய்து, சுவாதீன மற்றும் ஆவணப்பட இயக்குனர்களோடு கொண்டுள்ள நட்பும், அவர்களோடு தணிக்கைக்கெதிரான, கருத்துச்சுதந்திரத்திற்கான போராட்டங்களில் இணைந்து செயல்படுவதும் எனக்கு உத்வேகம் அளிப்பவை. பெண்ணிய உரையாடல்களிலும் கேரள, வங்காள கன்னடத் தோழமைகளோடு பங்குபெற்றிருக்கிறேன். தமிழகத்திலும், மற்ற மாநிலங்களிலும் இருக்கும் பல்கலைகழகங்களுக்கு, கல்லூரிகளுக்கு, பள்ளிகளுக்கு தொடர்ந்து பயணித்து ஆவணப்பட திரையிடல்களும், சாதி-பெண்ணியம்- கலாசார அரசியல்-சுற்றுப்புறச்சூழல் குறித்த கலந்துரையாடல்களும் செய்ததில் நான் கற்றுக் கொண்டது ஏராளம்.

என் ஆவணப்படங்களைத் திரையிடுவதற்காக தமிழகத்தின் கிராமங்கள் தோறும் சென்றதும் மக்களை சந்தித்து உரையாடியது, விவாதித்தது, அவர்களின் கவலைகளை, நம்பிக்கைகளை, அனுபவங்களை, கோபங்களை, ஆதங்கங்களைப் பகிர்ந்துக் கொண்டதும் நான் கற்ற சிறந்த கல்வி. பள்ளி, பொறியியல் கல்லூரி படிப்பை விட என் சமூகம் பற்றிய புரிந்துணர்வை ஆவணப்ப்டங்கள் மூலம் மக்களோடு உரையாடியதன் வழியே தான் பெற முடிந்தது. கருத்தியல் ரீதியாகவும், மார்க்சியம், தலித்தியம், பெண்ணியம் போன்றவற்றை கோட்பாடாக படிப்பதை விட மக்களின் அன்றாடப் போராட்டங்களின் வழி ஊடாடிப் பார்ப்பது வேறு படிப்பினைகளைத் தருகிற அனுபவம்.


9. கனிமொழி , சல்மா , குட்டி ரேவதி , மாலதி மைதிரி, சுகிர்தராணி போன்ற கவிஞர்கள் ஆரம்பகாலத்தில் மிகவும் பிரபலமாகத் தமிழ்ச் சூழலில் பேசப்பட்டார்கள். இன்று அவர்களின் இலக்கிய செயல்பாடுகள் என்ன?

ஆரம்ப காலம், முடிவு காலம் என்றெல்லாம் இருக்கிறதா என்ன? அவர்கள் இப்போதும் எழுதிக் கொண்டும் இயங்கிக் கொண்டும் தான் இருக்கிறார்கள்.
கவிதையைத் தவிர்த்து அரசியலிலும் ஈடுபடுகிறார்கள். நல்ல விசயம் தானே?
பெண்கள், அதுவும் படைப்பாளிகள் அரசியலுக்கு வருவது ஆரோக்கியமானது தானே?

ஆனால் என்ன, கனிமொழியின் தொலைபேசி அழைப்புகளை யாரும் ஒட்டுக்கேட்காமல் இருந்திருக்கலாம், அல்லது இந்த நீரா ராடியா வின் நட்பையாவது அவர் தவிர்த்திருக்கலாம். 2ஜி, 3ஜி ஊழலெல்லாம் நமக்கும் தெரியாமல் போயிருக்கும். கருவறையிலேயே ஊழல் வாசனை பிடித்திருக்காங்களே மேடம் என்ற அருவருப்பையாவது நாம் தவிர்த்துக் கொண்டிருக்கலாம். குடும்ப பெருமையைக் காப்பாற்றுவதில் அண்ணன்களையும் விஞ்சிவிட்டதால் நம்ம இலக்கியவாதிகள் குலவிளக்கு, குலக்கொழுந்து என்று ஏதாவது விருதை அறிவிக்க, அதற்கு மனுஷ்யபுத்திரன் பாராட்டுப் பத்திரம் வாசிப்பதும் விரைவில் நடக்கும்.


கவிஞர் சல்மா துவரங்குறிச்சியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று தோற்றார். இப்போது சமூக நலத்துறையில்(?) அவர் சேவை செய்ததற்கு கருணாநிதியின் வீட்டு மோசடியில் பங்காக திருவான்மியூரில் ஒரு கோடி மதிப்புள்ள வீட்டை “சமூக சேவகர்” என்ற அடிப்படையில் பரிசாக பெற்றிருக்கிறார். இனி அந்த வீட்டில் சாவகாசமாக அமர்ந்து மூன்றாம் சாமம் எழுதுவார்.

குட்டி ரேவதி எழுத்தாளர் சிவகாமியோடு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். மாயாவதியின் ஆயிரத்தி ஒன்றாவது சிலையை தமிழ்நாட்டில் நிறுவும் வேலை அவருக்குத் தரப்பட்டிருக்கலாம். அவர் விலகி வந்து விட்டார் என்று நம்புகிறேன். ஒரே ஆசுவாசம், அவருடைய புதிய தொகுப்பும், பழைய நான்கு தொகுப்புகளும் அடையாளம் பதிப்பகம் மூலமாக வெளிவந்திருப்பது தான். அவருடைய பூனையைப் போல அலையும் வெளிச்சம் என்ற முதல் தொகுப்பு நான் இரண்டாயிரமாவது ஆண்டு எழுத வந்தபோது, எனக்கொரு முன்மாதிரி. அந்த வகையில் அவருக்கு என்றும் நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

மாலதி மைத்ரியும் சுகிர்தராணியும் கவிதையில் எனக்கு முக்கியமானவர்கள். எழுத்தில் மட்டும் இல்லாது சமூக இயக்கங்களிலும் பங்கு பெறும், தலைமையேற்கும் ஆற்றல் மிகுந்தவர்கள். நானும் சுகிர்தராணியும் தமிழ்க்கவிஞர் இயக்கத்தில் சேர்ந்து இயங்கியிருக்கிறோம். மாலதிமைத்ரியோடு ஈழத்தமிழர் தோழமை குரலின் இயக்கங்களில் இணைந்து பொறுப்புகளைப் பகிர்ந்துக் கொண்டிருக்கிறேன். மிக உற்சாகமான காலங்கள் அவை. தமிழ் இலக்கியப் பண்பாட்டுச் சூழலில் அரசியலாகவும் படைப்பாளிகள் சுதந்திரமாக இணைந்து பணி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய நாட்கள்.ஆனால் எல்லாவற்றையும் காலச்சுவட்டிற்கு காட்டிக் கொடுக்கும் இவர்களின் அரசியல் மிக மோசமானது. பார்ப்பனீயத்திற்கு, ஆட்காட்டி அரசியலுக்கு, இலக்கிய கமிசாருக்கு இருவரும் காட்டும் விசுவாசம் இவர்கள் பேசும் அரசியலுக்கே எதிரானது. காலச்சுவடு பெரியாரைக் கொச்சைப் படுத்துவதற்கு, ’காலச்சுவடால் அறியப்பட்ட நான்’ என்று தன் தொகுப்பின் முன்னுரையில் எழுதும் மாலதி மைத்ரி என்ன பதில் வைத்திருக்கிறார். இஸ்லாமியருக்கு எதிரான கருத்துக்களைப் பரப்புவதை, பார்ப்பன சங்க விளம்பரங்கள் வெளியிடுவதை இவர்கள் உள்ளிருந்துக் கண்டித்திருக்கிறார்களா?


டெல்லிப் போராட்டத்தை பிரேமா ரேவ்தியை வைத்து ஃபேஷன் பேரேடு என்று எழுத வைத்தது காலச்சுவடு.அரசாங்க எதிர்ப்பு, யுத்த எதிர்ப்பு, பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துதல், சுயநிர்ணய உரிமை என்ற அரசியல் கோரிக்கைகளை முன்னிறுத்தி கவிஞர்கள், படைப்பாளிகள், மாணவர் இயக்கங்கள், மீனவர் இயக்கங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அரவாணிகள், பெண்கள் அமைப்பினர் அன்ற பல ஜனநாயக அமைப்புகள் ஒருங்கிணைத்து உருவான ஈழத்தமிழர் தோழமைக் குரலின் முக்கிய ஒருங்கிணப்பாளரான மாலதி மைத்ரி இதற்கு உடன்படுகிறாரா? டில்லியில் பாராளுமன்றத்திற்கு முன் மறியல்,ஊர்வலம், தொடர் உண்ணாவிரதம், சிங்கள தூதரக முற்றுகை-கைது, ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் எதிர்ப்பு ஊர்வலம் என்று கடுமையான தொடர் போராட்டங்களை மேற்கொண்ட மக்கள பிரதிநிதிகளை ஏதோ மந்தை போல சித்தரிக்கும் தகுதியும், தார்மீகமும் காலச்சுவட்டிற்கு இல்லை என்பதை ஏன் மாலதி மைத்ரி உணரவில்லை.

வால்பாறை தமிழ்க் கவிஞர் இயக்கக் கூட்டத்தையொட்டி, மதுவின் பிடியில், இளங்கவிஞர்கள் ஆதிக்க மனநிலைக்கு மாறுகிறார்கள் என்று சுகிர்தராணி தலித் அரசியல், இலக்கிய அல்லது தலித நேச சக்திகளுக்கு காட்டிக் கொடுத்திருந்தால் நேருக்கு நேராக விவாதித்திருக்கலாம். வடிக்கட்டிய இந்துத்துவ, பார்ப்பன,முதலாளியான கண்ணனுக்கு காட்டிக்கொடுக்கும் எடுபிடி வேலைக்கு சுகிர்தராணி தலித அரசியல் என்றல்லாம் தரகு செய்யாமல் இருந்திருந்தாலும் மன்னிக்கலாம்.



10. உலகம் முழுதும் பல நாடுகளுக்குச் சென்று உங்கள் ஆவணப்படங்களையும் குறும்படங்களையும் மக்களிடம் அறிமுகப்படுத்தி வந்துள்ளீர்கள். அது குறித்தான அனுபவங்களைக் கூற இயலுமா?

ஐரோப்பிய ஒன்றிய ஃபெலோஷிப்பில் இந்தோ ஜெர்மன் கலாசாரப்
பகிர்வின்பால் ஆவணப்படப் பயிற்சிப் பட்டறையில் கார்டிஃப்பின் தாம்சன் மீடியா பவுண்டேஷனிலும், திரைப்படங்களின் மூலம் சமூக சிக்கல்களை அணுகுவது பற்றிய ஃபின்லேண்டில் உள்ள டாம்பரே பல்கலைகழகத்திலும், புதுதில்லி இன்ஸ்டிடூயூட்டின் தயாரிப்பு மேற்பார்வையில் பங்கேற்று ’கனெக்டிங் லைன்ஸ்’ என்ற மாணவ்ர் அரசியலைக் குறித்த ஆவணப்படத்தை என் ஜெர்மானிய இயக்குனர் தோழி மிக்கேலாவுடன் எடுத்தது என்னை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது. அந்த ஃபெலோஷிப்பில் ஐரோப்பா வந்திருந்த தருணத்தில் தான் லண்டனில்,ஃபிரான்ஸில், ஜெர்மனியில், சுவிஸ்ஸில் ஈழத்து நண்பர்களின் அழைப்பில் என் ஆரம்ப கால ஆவணப் படங்களைத் திரையிட்டேன். ஒற்றையிலையென கவிதை நூலைப் பற்றிய விமர்சனக் கூட்டங்களும் நடந்தன. அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

சிகாகோ சர்வதேச பெண் இயக்குநர்கள் திரைப்பட விழாவுக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, அமெரிக்க தமிழ்ச் சங்க தோழமைகள் பல்வேறு திரையிடல்களையும், விவாதங்களையும் , சந்திப்புகளையும் ஒழுங்குபடுத்தினார்கள். சங்கரபாண்டி, விஸ்வநாதன் போன்ற சிறந்த தோழர்களையும், பல்வேறு பல்கலைகழக இந்திய அமெரிக்க நண்பர்களையும், செயல்பாட்டாளரகளையும், ஃபிரண்ட்ஸ் ஆஃப் சவுத் ஆசியா தோழர்களையும் அமெரிக்கப் பயணம் பரிசளித்தது.


சர்வதேச பெண் ஊடகவியலாளர்களின் அமைப்பில் செயலாற்றியதால் அமெரிக்காவிற்கு சர்வதேச மாநாட்டு வேலைகளுக்கு சென்ற தருணங்களில் மீண்டும் தமிழ்ச்சங்க நண்பர்கள மூலம் என்னுடைய அப்போதைய புதிய படங்களின் திரையிடல்களும், சந்திப்புகளும் நடந்தன. அந்த சமயம் கனடாவிலும் ஈழத் தோழமைகள் சேரன், சுமதி ரூபன் உதவியால் படங்களைத் திரையிடும் வாய்ப்பு கிடைத்தது.மலேசியாவிற்கு ஆசியத் திரைப்பட விழாவிற்கு நடுவராக வந்த அனுபவமும் வாய்த்தது. மலேசிய தமிழ் நண்பர்களின் முயற்சியில் மலேசியத் தமிழ்ச் சங்கத்திலும் , சிங்கை தமிழ் நண்பர்களின் அன்பின் பேரில் சிங்கப்பூர் நூலகத்திலும் ஆவணப்படங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் வாய்ப்பும் பெற்றேன்.

அகில உலக சோஷலிஸ்ட் இளைஞர்கள் மாநாட்டிற்காக வெனிசுவலா சென்றது மிக அரிய அனுபவம். மிலிட்டரி மேன்ஷனில் தங்கியதும், பொருட்களைத் திருடு கொடுத்ததும், வேளைக்கு ஒரு பிரட்டும், கால் கோழியும், அரை வாழைப்பழமும் ரேஷனில் சாப்பிட்டதும், லத்தீன் அமரிக்கா பற்றிய என் படிமங்களை மாற்றிப் போட்ட பயணமது. சேவெசின் 11 மணி நேர உரையையும் ஒரு எழுத்து ஸ்பானிஷ் கூட தெரியாமல், புல் தரையில் அமர்ந்து கேட்டது பசுமரத்தாணி போல நினைவிலாடுகிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஊடகச் செயல்பாடுகளைப் பற்றிய கட்டுரைகள் வாசித்ததும், ஆவணப்படங்களை திரையிட்டதும், பார்த்ததும், இன்னும் மாநாட்டின் இறுதி தீர்மானங்களின் போது இடதுசாரி தோழர்களோடு ஈழம் குறித்த பலத்த உரையாடல்களை மேற்கொண்டதும், இலங்கை ஜே.வி.பி,மற்றும் இந்திய மார்க்ஸிஸ்டுகளோடு கடுமையாக வேறுபட்டு சர்வதேச அரங்கில் ஈழம் குறித்த சரியான சித்திரத்தை வழங்கப் போராடியதுமாய் மிகத்துடிப்பான நாட்கள் அவை.

தேவதைகள் என் ஆவணப்பட முயற்சியில், சர்வதேச அரங்கில் மிக முக்கியமான ஆவணப்பட இயக்குநராக என்னை நிலைநிறுத்தியது. பெர்லின் திரைப்பட விழா, கென்யாவின் சர்வதேச பெண் திரைப்பட விழா, முனிச் சர்வதேச திரைப்பட விழாவில் ஹாரிசான் விருதுக்காக போட்டியிட்டது, மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் தங்கச் சங்கு விருது வாங்கியது, ரோம் திரைப்பட விழாவில் பங்கு பெற்றது, இன்னும் பெல்போர்ன், பெல்கிரேட், சவுத் ஆப்பிரிக்கா என்று சர்வதேசத்தில் பரந்துபட்டு என்னை திரைப்படைப்பாளியாய் கொண்டு சென்றது தேவதைகள் தான்.


காமன்வெல்த் ஃபெலொஷிப்பில் லண்டன் வந்திருந்தபோது தான் ஷோபா சக்தியோடு நட்பு வலுத்தது. ஃபிரான்ஸிலும், இந்தியாவிலும் சம்பிரதாயமாக சந்தித்திருந்தாலும், லண்டன் சந்திப்பு இடைவெளிகளை அன்பால், உரையாடலால், புரிதலால் நிரப்பி, சேர்ந்து பணி செய்யும் இடத்திற்கு நகர்த்தியது.

11. உங்கள் குறும்படங்கள் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவர காரணியாக இருந்துள்ளதா?

ஒரு திரைப்படத்தால் சமூகத்தில் மாற்றம் வந்துவிடும் என்பது அதீத நம்பிக்கை. ஆனால் உறுதியாக ஒரு வலுவான உரையாடலை நிகழ்த்த முடியும். இடையீட்டைக் கோர முடியும். ஒரு துண்டு வீடியோ, மக்களிடம் தீயாய் பற்றி ஒரு மக்கள் இயக்கமாக மாறியதை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். மாத்தம்மா, பறை, பலிபீடம் போன்ற என் முயற்சிகள் அத்தகையவையே! அரசாங்கத்தின் இடையீட்டைக் கோரிப் பெற்றதில், இப்படங்கள் வெற்றி பெற்றன.

ஆரம்ப கட்டங்களில் அரிய திரைப்படைப்புகளை தந்துவிட வேண்டும் என்ற உந்துதலெல்லாம் எனக்கில்லை. எனக்கு தொழில்நுட்பம் கைவருகிறது, என் மக்கள பிரச்சினையை ஏதாவதொரு வகையில் வெளிக் கொண்டு வர வேண்டும், சரி, படமெடுப்போம் என்ற வகையிலேயே நான் இயங்கத் தொடங்கினேன். ஒரு மீடியா ஆக்டிவிஸ்டாகத் தான் என்னை வரித்துக் கொண்டேன்.கிராமங்கள தோறும் தெருமுனைகளில், பள்ளிக்கூடங்களில், கல்யாண மகால்களில், தேரடியில், நூலகங்களில், பஞ்சாயத்து அலுவலகங்களில், மாட்டுக் கொட்டில்களில் கூட படங்களைத் திரையிட்டிருக்கிறேன். நிழல் திரைப்பட இயக்கம், அமுதனின் மறுபக்கம் திரைப்பட இயக்கம், இடதுசாரிகளின் இளைஞர்-பெண்கள்-பண்பாட்டு இயக்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், என்,ஜி,ஓக்கள், பல்கலைகழகங்கள என்று என் படங்களை கிராமங்கள் தோறும் கொண்டு செல்வதற்குப் பின் ஒரு பெரிய படை இருக்கின்றது. ஒவ்வொரு திரையாக்கமும், ஒவ்வொரு திரையிடலும் எனக்கு சமூகம் பற்றிய புதிய பாடங்களை கற்றுத் தந்தன.
என்.ஜி.ஓக்களோடு இணைந்து வேலை செய்வதை என் மீதான் விமர்சனமாக வைக்கிறார்கள். என்னுடைய ஒன்பது ப்டங்களில் என்.ஜி.ஓக்களின் நேரடி தயாரிப்பில் இரண்டே படங்களைத் தான் செய்திருக்கிறேன். ஒரு சில படங்களுக்கு ம்க்களை அணுகி வேலை செய்வதற்கான ஊட்கமாக அவர்கள் பயன்பட்டிருக்கிறார்கள். அதற்கான கிரடிட்டை படத்தில் தந்திருப்பேன். அப்படி ஒட்டுமொத்தமாக என்.ஜி.ஓக்களை பொதுமைப்படுத்திப் பார்த்து, அவர்களைத் தவிர்ப்பது தேவையற்றதும் கூட என்றே நான் நம்புகிறேன். அவ்ர்கள் மூலமாக இன்னொரு நூறு மக்களுக்கு நான் என் படங்களைக் காட்ட முடியுமென்றால் எனக்கு ஒப்புக் கொள்வதில் எந்த சிரமமுமில்லை. ரூத் மனோரமா, பெர்னார்ட் பாத்திமா, யேசு மரியான், கிருஸ்துராஜ், நீலவள்ளி போன்ற மிகச் சிறந்த நண்பர்களை என்.ஜீ.ஒ தொடர்பினூடே நான் அடைந்தேன்.

என் படங்கள் சில கேள்விகளை, எளிய நம்பிக்கைகளை, சுய விமர்சனங்களை, இடையீடுகளை, உறுதிமொழிகளை ஒரு கூட்டு மனசாட்சியின் நடவடிக்கையாக ஓரளவு நிகழ்த்தியுள்ளன என்று நான் நிச்சயமாக கூற முடியும்


12. பெரியாரியம் பற்றி பேசினீர்கள். திருமணம் பற்றியும் குடும்ப அமைப்பு பற்றியும் உங்க பார்வை என்ன?

திருமணம், குடும்ப அமைப்பு நிச்சயம் பெண்ணை இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளுபவை தான். இன்று போரினால் கொல்லப்படும் மக்களை விட, வறுமையால் இறக்கும் மக்களைவிட, குடும்ப வன்முறையால் சாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்று புள்ளிவிபரங்கள சொல்கின்றன.
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்றவற்றால் பெண்கள் பெருவாரியாக படிக்கிறார்கள், வேலைக்கு வந்துவிட்டார்கள் என்றெல்லாம் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பெண்களுக்கு இரட்டைச் சுமை தான் எஞ்சியுள்ளது. குடும்பங்களில் ஆண் பெண் வேலைப்பகிர்வு என்பது எல்லாவகையிலும் சனநாயகப்படுத்தப் படவில்லையென்றால், பெண்கள் அழுத்தத்தில் தற்கொலை செய்துக் கொளவதையும், மனப்பிறழ்வடைவதையும், வெளியேறுவதையும் தடுக்க முடியாது. குடும்பங்களில் பெண்கள் செய்யும் சமையல், துப்பரவு, குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் போன்ற வேலைகளுக்கு ஊதிய மதிப்பை கணக்கிட்டுப் பார்த்தால் புரியும், குடும்பம் எத்தகைய சுரண்டல் அமைப்பென்று!
மாடுபிடிக்கும் வேலைபோல சொந்த சாதியில் பெண்களை விலைபேசி விற்கும் இழிவு இந்த நூற்றாண்டிலும் நம் சமூகத்தில் தான் நடந்துக் கொண்டிருக்கிறது. கேவலம் பிடித்த மேட்ரிமோனியல் அறிவிப்புகள் நம் சமூகத்தின் அவமானச் சின்னம். பெண்ணிற்கு சுய தேர்வை மறுக்கும் கெளரவக் கொலைகள் குடும்பம் மற்றும் சாதியின் கொடூர வன் முகங்கள்.

ஜெரால்டு என்ற என் தோழனை நான் கைப்பற்றியபோது, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ எங்கள் குடும்பங்கள் அனுமதிக்கவில்லை. என் குடும்ப வரலாற்றிலேயே, முதன் முதலாக சாதி-மத-சடங்கு மறுப்பு திருமணத்திற்காக வெளியேறியவள் நான். ஏன் தாலியில்லை என்ற கேள்விக்கு பதில் சொன்ன காலம் கடந்து, இன்று விவாக மறுப்பு காலம் வரை வந்துவிட்டேன். வலி நிறைந்த வாழ்க்கைப் போராட்டம். நம்பும் கொள்கைகளை சொந்த வாழ்க்கையிலாவது கடைப்பிடிக்க வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற என் பிடிவாதத்திற்கு நான் கொடுத்த விலை அதிகம். என் அன்புக்குரியவர்களை கொடூரமாக மனக்காயப் படுத்தியிருக்கிறேன் என்று எண்ணி இரவிரவாக சில சமயங்களில் அழ நேர்ந்தாலும், வேறு வழி தெரியவில்லை. சொந்த சாதியில் சீர் செனத்தி, நில பாகங்களோடு திருமணம் செய்திருந்தால் என்னைப் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும். குடும்ப அமைப்பை சனநாயகப்படுத்துதல், பெண்ணின் சுயதேர்வு, ஆண்-பெண் வேலை பகிர்வு, வரதட்சணை ஒழிப்பு, பெண்ணுக்கு சொத்துரிமை, சாதி மறுப்பு திருமணங்கள், காதல் வாழ்வில் சேர்ந்திருப்பது, குடும்பமின்மையைத் தேர்வு செய்வது, மண விலக்கிற்கான பூரண சுதந்திரம் என்று பல புள்ளிகளில் சீரமைப்பு தேவையாய் இருக்கின்றது.

வர்ஜீனியா வுல்ஃப் சொன்னது போல் Room of my own முப்பத்திரண்டு வயதில் தான் எனக்கு சாத்தியமாகியிருக்கிறது. ஒரு பெண் தனக்கென்று ஒரு வீட்டை ஏற்படுத்திக் கொள்வது, வாழ்வது என்பதை இன்னும் இந்த குடும்ப அமைப்பு அடாத செயலாக, ஒழுங்கு மீறலாக, நடத்தை கெட்ட தனமாகத் தான் பார்க்கிறது. எப்படி தனியாக இருக்கிறீர்கள் என்ற இந்த சமூகத்தின் கேள்விக்கு என் காதுகள் செவிடாகக் கடவதாக!

13.தமிழகத்தின் தற்போதைய இலக்கிய சூழலில் சிற்றிதழ்களாகத் தங்களை அடையாளம் காட்டிக்கொள்பவை உண்மையில் இலக்கியம் வளக்க செயல்படுகின்றன என நம்புகிறீர்களா?

புது எழுத்து, மணல் வீடு, கல்குதிரை, புதுவிசை, உன்னதம், நிழல், தக்கை, கருக்கல், தாமரை, புத்தகம் பேசுது, உங்கள் நூலகம், சஞ்சாரம், செம்மலர், பவளக்கொடி, தலித் முரசு, அணி, அகநாழிகை என்று இன்றும் சிறுபத்திரிகைகள் மாத இதழ்களாக, இருமாத இதழ்களாக, காலாண்டிதழ்களாக, தம்மளவில் சாத்தியமான கால அலகுகளில் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இடையறாமலும் வெளிவந்தபடி இயக்கம் பெற்றிருக்கின்றன. காலச்சுவடு, உயிர்மை போன்ற மடாலயங்களில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளாமல், அவர்களின் நிலைய வித்துவான்களின் வரிசாக்கிரமங்களில் இடம்பெறாத என்னைப் போன்ற தவிட்டுக் குழந்தைகளுக்கு சிறுபத்திரிகைகள் மட்டுமே நம்பிக்கைவெளி. ஒவ்வொரு தீவிர இலக்கிய வாசகரும் இவற்றைத் தேடிப் படித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இன்றளவும் கலாசாரப் பெரும்போக்குகளில் உடைவுகளை ஏற்படுத்திய படைப்புகள் சிறுபத்திரிகைகளிலேயே வெளிவந்துள்ளன.

போர்ஹே, மார்க்வெஸ், வில்லியம் பர்ரோஸ், லோசா, நபகோவ், போன்றோரது நேர்காணல்களையும் கதைகளையும் மொழிபெயர்த்து மிகுந்த சிரமங்களுக்கிடையே வெளியிடுகிறது ’உன்னதம்’. ரோலன்பார்த்தின் 'ஆசிரியன் என்பவன் யார்?', மிஸல்பூக்கோவின் 'ஆசிரியனின் மரணம்' என மிக முக்கியமான பின் நவீனத்துவக் கட்டுரைகளை ஒரு ஆரம்ப நிலைப் படைப்பாளியாக எனக்கு வாசிக்க தந்ததும் உன்னதமே.

அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதிகளைக் கொண்டாடும் மனநிலைக்கு வாசகர்களைத் தள்ளும் இலக்கிய விசாரங்களுக்கு மத்தியில் காத்திரமான அரசியல் விவாதங்களையும், சமூக முரண்களை அலசும் கட்டுரைகளையும், ஆய்வுகளையும் சமரசமின்றி முன்வைக்கின்றது ’புதுவிசை’. புதுவிசையின் ஒவ்வொரு இதழையும் அழுக்கேறி, பக்கங்கள் கசங்க கசங்க வாசிக்க தீவிர இலக்கிய மனம் பித்தம் கொள்ளும்.

தமிழ்க்கவிதை மீதான கனவுகளுக்கும், கவிதை பாய்ச்சலெடுக்கும் பாதைகளின் மீதான கட்டியம் கூறுதலுக்கும் ’புது எழுத்து’ சளைக்காமல் உழைக்கிறது. கடும் சவால்களைக் கடந்தும் இதழை உயிர்ப்போடும் உயிரோடும் வைத்திருக்கும் மனோன்மணி அவர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்குமான அங்கீகாரமாக சிறந்த சிறுபத்திரிக்கைக்கான தஞ்சைத் தமிழ்ப் பல்கலையின் விருதைப் புது எழுத்து சமீபத்தில் பெற்றது.

மானாட மயிலாட ஊடக வன்முறைகளுக்கு மத்தியில் எது கலை, எதற்கு கலை, யாருக்கு கலை என்ற கேள்விகளை சதா எழுப்பிக்கொண்டு, காலம் தின்று வாழும் மண்ணின் கலைகளை, கலைஞர்களை, அவர்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து பதிவு செய்வதோடு, அவர்களை மரியாதை செய்யும் பணியாக கலை இலக்கிய விழாக்களையும் வருடந்தோறும் நிகழ்த்தி வரும் ’மணல் வீடு’, இலக்கிய அரசியல் குறித்து வைக்கும் விவாதங்கள் இலக்கியப் பீடங்களை கூசச் செய்பவை.

தரமான சினிமாவையும், கலைப்படங்களையும், குறும்படங்களையும், விவரணப்படங்களையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ’நிழல்’ மாற்று சினிமாவுக்கான ஆற்றலுள்ள களம். என்னைப் போன்ற மாற்று சினிமா முயற்சியாளர்களை அடையாளப்படுத்தியதில் நிழல் பத்திரிகை, திரைப்பட இயக்கம் இரண்டிற்கும் தவிர்க்க முடியாத பங்குண்டு., சினிமாவை கருணாநிதி குடும்ப மாஃபியாக்கள் ஆக்கிரமித்திருக்கும் இன்றைய கால கட்டத்தில், சுவாதீன முயற்சிகளை கற்பனையில் கூட நினைத்து பார்த்து விட முடியாத வன்சூழலில் நிழல் போன்ற பத்திரிகைகள் தொடர்ந்து வருவதும் கூட பண்பாட்டுச் சூழலில் மிக முக்கியமான சலனம்.

இப்படி, ஒவ்வொரு சிறு பத்திரிகையும், தனிநபர்களை மையமாகக் கொண்ட இலக்கிய அரசியலின் வன்முறைகளுக்கு மத்தியில் தன்னிச்சையாகவும், பிரஞ்யாபூர்வமாகவும் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. கார்பரேட் குருக்களாகவும், அதிகாரத்தின் கைக்கூலிகளாகவும், வணிக சினிமாவின் பஞ்ச் டயலாக் வசனக் கர்த்தாக்களாகவும், இணைய ஃபாஸ்ட் புட் பிளாக் எழுத்தாள காளான் பண்ணைக்காரர்களாகவும் இருக்கும் எழுத்தாள பீடங்களின் மேல் பூச்சிக் கொல்லி மருந்தை அடிக்கும் புகை மண்டிய வண்டிகளின் ஓட்டுநர்கள் நமது சிறுபத்திரிகை காரர்கள். அவ்வண்டிகளின் பின்னே தொற்றிக் கொண்டு ஆராவாரித்துக் கொண்டே செல்லும் சாலை சிறுவர்களாய் என்னைப் போன்ற தீவிர வாசகர்கள் இருக்கிறார்கள்.

என்னளவில் திரைப்பட ஆர்வலர்களாக நானும் ஜெரால்டும் ’திரை’ பத்திரிகை என்ற சிறு முயற்சியை செய்து, ஏழு இதழ்களுக்கு மேலாக பொருளாதார நெருக்கடி மற்றும் விநியோகம்-சந்தை குறித்த போதாமைகளால் தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்திவிட்டோம்.

ஒரு இலக்கிய வாசகியாக, லும்பினி தோழமையோடு இணைந்து நிறப்பிரிகையின் பதின்மூன்று இதழ்களையும் சேகரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்த முயற்சி மனதுக்கு மிகவும் நெருக்கமான தருணம். நிறப்பிரிகை தமிழ் நவீன இலக்கியத்தில் ஒரு அழியா சுனை.


http://www.vallinam.com.my/issue28/interview.html

14. தமிழ்ச்சினிமாவில் ஒரு ஹீரோவை சில பில்டப்புகள் கொடுத்து உருவாக்கிவிட்டு, பின்னர் அவர் பெயரை வைத்து சம்பாதிக்கும் மலிவான சூழல் போல தமிழகத்தில் நீங்கள் சொன்ன இதழியல் மடாலயங்களும் செயல்படுவதைப் போன்று வெளியிலிருந்து பார்க்கும் என் போன்ற வாசகர்களுக்குத் தோன்றுகிறது. அது பற்றி கூறுங்கள்...

இளம் படைப்பாளராகவும், வாசகராகவும், தமிழ்ச் சூழலின் சந்தைமயச் சூழல் என்னை கவலையில் ஆழ்த்துகிறது. சந்தை என்ற பேரதிகாரத்திற்கு எதிராக எந்த எழுத்தும் உருவாகி விடக் கூடாது என்பதில் இலக்கிய மடங்கள் மிக கவனமாகவே உள்ளன.

சர்வதேச பார்ப்பன வலைப்பின்னலை வைத்துக் கொண்டு சமூகத்தின் உள்முரண்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் காலச்சுவடு கண்ணன் தன்னை விக்கி லீக்ஸ் அளவுக்கு நம்பிக் கொள்வதும் , நம்மை நம்ப வைக்கத் துணிவதும் இலக்கியச் சூழலின் சாபக்கேடு. சுந்தரராமசாமியோடு காலச்சுவடு நின்றிருந்தால் இலக்கியப் பிரதியாகவாவது காலத்தின் நினைவில் இருந்திருக்கும். தொண்ணூறுகளில் இஸ்லாமிய தீவிரவாதம் என்றெல்லாம் பேசி பரப்பி, இஸ்லாமிய வெறுப்பை கக்கிய கண்ணன் இரண்டாயிரங்களில் இஸ்லாமியப் பிரதிகளை விற்கிறார். அவருக்கு பத்திரிக்கை நடத்த தெரிந்திருக்கிறது. அல்லது வாசகர்களின் மறதியையும், முட்டாள்தனத்தையும் சந்தைப் படுத்தும் தந்திரம் கைவந்திருக்கிறது.

பார்ப்பனிய சங்கத்திற்கு சென்று பார்ப்பனிய விழுமியங்களைப் பேசிய சுஜாதாவை இலக்கிய கர்த்தாவாக கூவி விற்கும் மனுஷ்ய புத்திரன் மனிதர்களைப் பேதபடுத்திப் பார்க்க முடியாத குழந்தையாகிவிட்டார். அவருக்கு எல்லோரையும் அன்பு செய்ய வேண்டும் போலிருக்கிறது. இதற்கிடையில், அவர் காலச்சுவட்டில் விட்டு வந்த மூட்டையை வேறு எரித்துவிட்டார்கள். அவருடைய அன்பின் பரிமாணம் எல்லா திசைகளிலும் சந்தை வரை வழிகிறது. மேல்தட்டு பாலியல் அரிப்புகளை சுரண்டும் கார்பரேட் பிரதிகளையும், மிக கவனமாக அரசியல் நீக்கத்தை தணிக்கை முறையாக கொண்ட இலக்கியப் பிரதிகளையும் , புனைவு மொழியாக ஆர்.எஸ்.எஸ் வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் பழைய ஆசிரியப் பிரதிகளையும் அவர் அன்பிற்காகவே உற்பத்தி செய்து தரும் நாயகர்களும் அவருக்கு வாய்த்திருக்கிறார்கள்.

15.உங்கள் கவிதைகளின் சொல் மற்றும் வரிகளின் அடுக்குகள் அவற்றுக்கென தனிச் சிறப்புடன் ஓர் இடத்தில் அமர்கின்றன. மிகுந்த பிரக்ஞையோடு அவற்றை அடுக்குகிறீர்கள். அவை எவ்வகையில் கவிதைக்கு அவசியமாகின்றன ?

கவிதையில் இயங்கும் வார்த்தைகள் அதற்கெனவே கொடுக்கப்பட்ட இடங்களில் வாகாக சென்று அமர்வதில்லை. ஒழுங்கு குலைந்த அடுக்குகளில் தான் இடம்பெறுகிறது. அவை வாசிப்பவரின் அர்த்தம் கோரும் நேர்க்கோட்டுத்தன்மையை விட உணர்வுத் தளங்களை அதிகம் கோருகின்றன, வெறும் உணர்ச்சிக் கோர்வைகளா என்று கேட்டுவிட வேண்டியதில்லை. ஆணின் அத்தனை பிரதிகளிலும் உணர்ச்சியற்ற இடத்தில் தானே பெண் வைக்கப்பட்டிருக்கிறாள்? அதனாலேயே கவிதையில் உணர்வுத் தளம் என்பதும் ஒழுங்கற்ற அரசியலாகவே இருக்கின்றது.
ஆமாம், நான் பிரக்ஞையோடு தான் வார்த்தைகள், அடுக்குகள், வடிவங்கள் வழியாக கவிதைகளைத் தயாரிக்கிறேன். அதிக ரொட்டிகளைத் தயாரிப்பதாலேயே என் பெயர் அவற்றில் பொறிக்கப்பட வேண்டியதில்லை என்ற பிரெக்டின்(Brecht) குறிப்பொன்று கூடவே நினைவுக்கு வருகிறது.


16.எழுதுவதால் அதிகம் விமர்சிக்கப்படுகிறீர்கள். இதை எவ்வாறு எடுத்துக்கொள்கிறீர்கள்.

ஆசிரியர் இறந்து விட்டார் என்பதை ஏற்கெனவே முன்மொழியப்பட்ட கருத்துருவங்கள் இறந்துவிட்டதாகத் தான் நான் எடுத்துக் கொள்கிறேன். அவ்வகையில் உலகத்தின் மொத்த மூல ஆசிரியப் பிரதிகளும் இறந்துவிட்டன என்று சொல்லலாம் எனக் கருதுகிறேன். கடவுள் உட்பட.
இப்பொழுது எழுதப்படுவது வாசக மறுபடைப்பு பிரதிகள்.

வாசகர் படைப்பாளியாக கோரவில்லை. அவர் தன் அரசியல் உரிமையை மீட்டெடுக்கிறார். அவ்வளவில் பிரதி மீதான ஆசிரிய ஆதிக்கம் இல்லாமல் போகிறது. வாசக மறுபதிப்பு பிரதிகளை அடித்தளப் படைப்புகளாக புரிந்துக் கொள்ளும் பட்சத்தில், மூலப்ப்பிரதி என்பது எப்படி எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக, வழிமொழிவதாக இருக்கிறதோ, வாசக மறுபடைப்பு பிரதி எல்லாவற்றிலிருந்தும் வெளியேறி இருப்பதையும் நாம் புரிந்துக் கொள்ளலாம். அந்தப் பாதையில் எனக்கென்ற உலகை புதியதாக கட்ட முயன்ற அளவில் என் மீதான விமர்சனங்களை பொருட்படுத்தியும், கடந்தும் செல்ல எத்தனிக்கிறேன்.

17.உங்கள் கவிதைக்கான ஆரோக்கியமான விமர்சனங்கள் , உரையாடல்கள் தமிழ் சூழலில் நிகழ்ந்துள்ளதா?

இல்லை. நடந்த உரையாடல்களும் சமூகத்தின் ஆரோக்கியமின்மையையும், நோய்மையையும் காட்டியது. அது குறித்து எனக்கு வருத்தம் தான்.,

சமுகம் என்பது ஒரு புனைவு. அதை நீண்ட காலமாக பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் ஒழுக்கவாதிகளாக இருக்கிறார்கள். பெண் தன் உடலை, உலகை எழுதும்போது பரத்தமை கால செவ்வியல் பண்புகளில் ஒருவித பதட்டம் ஏற்படுகிறது. இங்கே மத அடிப்படை வாதிகள் வைக்கும் அதே குற்றச்சாட்டைத் தான் மார்க்சிய வாதிகளும் வைக்கிறார்கள், எல்லா வாதிகளும் வைக்கிறார்கள். பெண்ணை நிலைகுலைய செய்ய வைக்கும் வார்த்தைகள் இன்னும் ஏராளமாக சமூகத்தின் கையிருப்பில் இருக்கிறது.

ஆனால் பொதுவாக அத்தகைய "சமூக" ஆரோக்கியம்? குறித்து நான் கவலைப்படுவதில்லை.


18.கவிதை தவிர வேறெந்த இலக்கிய வடிவத்தில் முயன்றுள்ளீர்கள்?

கவிதை தவிர என் கவனமெல்லாம் சினிமா மட்டுமே.

19.தனுஷ்கோடி கம்பிப்பாடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வின் துயரத்தைக் கண்டும், அதிகாரத்தால் சுரண்டப்பட்ட கொடூரத்தையும் கண்டும், சராசரியாக மூன்று மீனவக் குடும்பங்களில் ஒரு விதவையாவது இருப்பதை உணர்ந்தபோதும், செங்கடலை எழுதத் துவங்கினேன் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஒட்டுமொத்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பெரும் கூட்டத்தில் நீங்கள் தொட்டிருப்பது மீனவ சமூகத்தை மட்டும் என்பதால் அவர்களின் துயரத்தை நெருக்கமாக உணரும்போது, ஈழம்/யுத்தம் குறித்த உங்களின் மனநிலை எப்படி மாறுபட்டது?

யுத்தம் என்பது தேசிய அரசாங்கங்களின் பிரச்சனை. தேசியத்திற்கு எதிரான புரட்சி என்பது மக்கள் பிரச்சினை. இடையில் தேசிய வரைவெல்லைகளில் மக்கள் பலியாவார்கள். வளர்ந்த நாடுகளில் குடியமர வேண்டி முன்றாம் உலக நாடுகளிலிருந்து தப்பி எல்லை தாண்ட முயற்சிக்கும் லட்சக்கணக்கான மக்கள் உலகெங்கும் கொடூரமாக கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சிறிமாவோ பண்டாரநாயக்கா காலத்தில் சிறிமாவோ -லால் பகதூர் சாத்திரி ஒப்பந்தத்தால் லட்சக்கணக்கான மலையக மக்களை இந்தியா திருப்ப பெற்றுக் கொண்டதும் , இந்திரா காந்தி கச்சத் தீவை விட்டுக் கொடுத்ததும் இனப்போருக்கு முன் தானே நிகழ்ந்தது.
இலங்கை என்கிற தீவினுடைய சர்வதேச மதிப்பு பன்னாட்டு கம்பெனிகளுக்கு நன்றாகத் தெரியும். பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தன்னைத் திறந்து விடும் சிங்கள அரசாங்கம் அதை ஏற்று வாழாத, அல்லது எதிர்வினை செய்கிறவர்களை அழித்தது. ஜே.வி.பி.முன்னெடுத்த மார்க்சிய எழுச்சியின் போது பெரும்பான்மை இனமான சிங்களர் களிலேயே ஒரு லட்சம் மக்களை கொன்றது. பிறகு இன உள்முரண்களை ஊதி சிங்கள தமிழ் இனங்களைப் பிரித்தாண்டு சிறுபான்மை தேசிய இனத்தை ஒழித்தது.

சந்தை மதிப்பு மிக்க மனிதர்கள் தவிர ஒரு நாட்டின் எல்லைக்குள் அதன் சொந்த வருமானத்திற்குப் பயன்படாத அன்னியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரு வேளை மீனவர்கள் வரி கட்டுபவர்களாக, அந்நியச் செலாவணியில் பங்கு கொள்கிறவர்களாக இருந்தால், அரசாங்கங்கள் பதில் சொல்லும். ஆனால், எல்லை தாண்டும் "சர்வதேச குற்றவாளிகளை" காப்பாற்றுமா என்றால் செய்யாது.பாரம்பர்யமாக மீன் பிடிப்பவர்களுக்கு சர்வதேச எல்லைகள் கிடையாது என்பதை தேசிய அரசாங்கங்கள் கையெழுத்துப் போட்டு ஒத்துக் கொள்ளும். ஆனால் நடைமுறையில் எல்லைகளில் கொலைகாரர்களை நிறுத்தும்.
ஆகவே மீனவர் பிரச்சனையை மனிதாபிமான பிரச்சினையாக பார்க்க முடியாது. அது அரசியல் பிரச்சனை.

ஏகாதிபத்தியத்தின் சர்வதேசிய வல்லாதிக்கத்தினை ஏற்றுக் கொள்ளாத எந்த நாடும் தனித்து வாழ முடியாது. அதன் வெளிப்படையான முரண்பாடு தான் யுத்தம்.மக்களை சதா சாமானியர் களாக்கி அச்சுறுத்துவது தான் யுத்தத்தின் வெற்றி. அதற்காகத் தான் அரசாங்கங்கள் தங்கள் ராணுவத் தளவாடங்களில் இரவு பகலாக கருவிகளை உற்பத்தி செய்கின்றன.
இதுவே செங்கடல் அனுபவம் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்


20.தனுஷ்கோடி, ராமேஷ்வரம் மீனவர்களின் வாழ்க்கையை சினிமாவின்(செங்கடல்) மூலம் மீளுருவாக்கம் செய்யும் பணியில் அவர்களின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது? சினிமாவின் வழி அவர்களின் வாழ்வைப் பதிவாக்கும் முயற்சியில் அவர்களிடம் பழகிய கணங்களில் உங்களுக்குள் ஏற்பட்ட பதிவுகள் பற்றி சொல்லவும்.

எப்படி கடற்கோள் ஒரு நகரத்தை அழிக்கும் என்ற பீதியை ஏற்படுத்தும் காட்சிப் பொருளாக, நாடெங்கிலுமிருந்து பேரழிவின் சின்னத்தைப் பார்த்துவிட்டு போய்விடலாம் என்ற சாடிசத்தொடு வரும் டூரிஸ்டுகளின் வடிகாலாக, பூணூல் போட்ட அய்யர்சாமிகள் இறந்தவர்களுக்கு திதி குடுக்கும் வங்காள வரிகுடாவும் - இந்தியப்பெருங்கடலும் சங்கமிக்கும் புனிதஸ்தலமாக தனுஷ்கோடி இதுவரை அறியப்பட்டிருக்கிறது. எனக்கு அது ஒரு பராரி நிலம். நடந்து செல்லும் மணல் மேட்டிற்கு கீழே புதைக்கப்பட்டிருக்கும் சடலங்களைக் குறித்த கதைகள் துரத்தும் காடு.உயிர் வாழ்தலை மட்டுமே செய்துக் கொண்டிருக்கிற அந்த மீனவ சமூகம் என் அலைவுறுதலையும் தன் பாடோடு இனம் கண்டது. குறைந்தபட்ச வாழ்வாதாரங்களோடு தங்கள் இருப்பை நீட்டித்துக் கொண்டிருக்கும் அவர்களை அதிகாரம் குற்றவாளிகளாகப் பார்ப்பதை முறையிட்டது. அதை வெளி உலகத்திற்கு எடுத்துக் காட்டி தங்கள் வாழ்வுரிமைக்கான எளிய நம்பிக்கையை செங்கடல் பெற்றுத் தரும் என்று நம்பியது. அரசாங்கங்களுக்கு எல்லைகள் குறித்தான பிரக்ஞை இருப்பது போல மக்கள் குறித்தான பிரக்ஞை இல்லை. அந்த சமூகத்திற்கு நற்செய்தி சொல்லிவிடும் வல்லமை எனக்கில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் பொது நீதிக்கும், தன்னிலைக்குமிடையே அவர்கள் படும் போராட்டத்தை மிக நேர்மையாக, உண்மைக்கு நெருக்கமாக என்னால் செங்கடல் மூலம் எடுத்துச் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. அதை எந்த பழுதுமில்லாமல் செய்திருக்கிறேன்.
ராணுவம், காவல் துறை, சுங்க வரித்துறை, உளவுத்துறை, என்று அதிகாரம் நசுக்கும் தனுஷ்கோடியின் மீனவ வாழ்வியல் மிக மிக ஆதாரமான உரிமையையே கோருகின்றது. ஆனால் நானும் கூட இரண்டு நாடுகளுக்கான சட்டங்களுக்கு அவர்களைக் கையளித்து விட்டே திரும்ப வேண்டியிருந்தது. அவர்களின் ஆதாரமான வாழ்வின் தோல்வியே என் கலையின் தோல்வியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். படம் முடக்கப்பட்ட நிலையில் சட்டங்களை மீறி கூட மீனவர்கள் வாழத் தான் செய்வார்கள் என்ற உணர்வே எனக்குமான உணர்வாக இருக்கிறது.

ஆனால், இப்படிப்பட்ட நிலங்களைத்தான் ஒரு காட்சிக் கலைஞராக நான் வாழ்நாள் முழுதும் தேடி கண்டடைவேன் என்ற உறுதி மட்டும் என்னுடன் திண்ணமாக மிஞ்சியிருக்கிறது.

21. ஷோபா சக்தியின் இலக்கிய ஆளுமையும் அதே சமயத்தில் யுத்தம் தொடர்பான நெருக்கமான அவருடைய அனுபவமும் செங்கடல் சினிமாவில் எப்படி வெளிப்பட்டுள்ளது? சினிமாவின் எந்தப் பகுதியில் அவருடைய ஆளுமைத் தீவிரமாக இயங்கியது?

ஒரு இலக்கிய வாசகராக ஷோபாசக்தியின் தீவிர காதலி நான். அவரின் பிரதிகளிலேயே ஒரு நூறு திரைக்கதைகள் விரவியிருக்கின்றன. செங்கடலை பற்றி சொன்ன போது, இது தனுஷ்கோடி மீனவ சமூகத்தை கள ஆய்வு செய்ததன் மூலமாக எழுதப்பட்ட கதை, அதன் அடிப்படையிலேயே திரைக்கதையை உருவாக்க வேண்டும் என்றேன். குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்கள் வரும் காட்சிகள், வசனங்கள், கதாபாத்திரங்கள் போன்றவற்றிற்கு அவர் பொறுப்பேற்று உதவ வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன். ஜெரால்டோடும், என்னோடும் திரைக்கதைப் பணியில் இணைந்துப் பணியாற்றுவதற்கு உற்சாகமாக ஒத்துக் கொண்டார். வசனத்தையும் பொறுப்பேற்று செய்தார். அது அவரின் பெருந்தன்மை. அந்த நிமிடத்தில் இருந்து இன்று வரை செங்கடலில் என்னை விடவும்,ஜெரால்டை விடவும் அதிக நம்பிக்கை வைத்திருப்பவர் அவர்.தயாரிப்பாளர் இருந்தபோது சரி, கைவிட்டபோதும் சரி, எந்த ஆதரவும் இல்லாமல் நண்பர்களிடமும், குடும்பத்திடமும் கடன் வாங்கி படப்பிடிப்பு நடந்த காலக்கட்டத்திலும், படத்தை தொடர்ந்து முடிக்க முடியுமா, வேறு தயாரிப்பாளர் கிடைப்பாரா என்ற அவநம்பிக்கையும், அலைதலும், விரக்தியுமாய் நொந்து திரிந்த நேரத்திலும், எண்ணற்ற தடைகளும், கல்லடிகளும் அவமானமுமாய் மௌனித்திருக்கும் தருணங்களிலும் அவர் தந்த அசைக்க முடியாத உறுதி எனக்கு பாரிய ஆறுதல்.

படத்தில் அகதிகளாக நடித்தவர்களும் அகதிகளே. அவர்களைப் பயிற்றுவித்ததும், அவர்களின் அனுபவங்களை வசனங்களாக மாற்றியதும், முக்கியமாக சூரி என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியதுமாய் செங்கடலின் ஆக்கத்தில் அவர் பங்கு முக்கியமானது. ஒரு குறிப்பிட்ட அகதி கதாபாத்திரத்திற்கு யாரும் சரியாக வராததால், நானும் அகதி தானே, எனக்கு வாய்ப்பு தர மாட்டீர்களா என்று கேட்டதோடு , அதை மிகச் சிறப்பாக நடித்தும் தந்தார்.
எந்த சூழ்நிலையிலும், படைப்பாக்க மன நிலையையும், ஆன்மாவையும் சிதைக்க அனுமதிக்காத அவரின் தோழமை செங்கடல் எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.


22.தங்களின் முந்தைய படைப்புகளின்(குறும்படங்கள், ஆவணப்படங்கள்) மீது உங்களுக்கு அவ்வளவு பெரிய ஈர்ப்பு இல்லாததாக ஒருமுறை சொல்லியிருந்தீர்கள். உங்களுடைய முந்தைய குறும்படங்கள், ஆவணப்படங்களின் அடைவுநிலையை எப்படி மீள்பார்வை செய்கிறீர்கள்?

ஆரம்ப கால படைப்புகளைப் பற்றி யார் கேட்டாலும் எனக்கு நினைவுக்கு வருவது நபகோவின் மேற்கோள் ஒன்று.

"யாராவது தன்னுடைய கோழையையே தட்டில் வைத்து சுற்றுக்கு விடுவார்களா?"
செங்கடலை விட்டே நான் வெளியேறி விட்டேன்.
நிம்மதி என்பது ஆன்மாவிற்கு இழிவாம் நவீன்.

23. இத்தனை சிரமங்களுக்கிடையில் தனிகை குழுவினரால் நிராகரிக்கப்பட்ட செங்கடலைத் திரையிட அடுத்த தங்களின் செயல்பாடு என்ன? தணிகை குழுவினர் சொல்லும் காரணம்தான் என்ன?

வெட்கங்கெட்ட இந்திய சனநாயகம் கலையைக் கண்டு அஞ்சுகிறது. சட்டமன்றம் நாடாளுமன்றம் போன்ற தன் கண்ணாடி கூடுகளை நிஜமான கலை, சிறு கல் கொண்டு எரிந்து நாசம் செய்து விடுமோ என்று நடுங்குகிறது. அவ்வளவு பலவீனமான அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அனைத்து மக்களுக்குமான கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஆர்டிகல்(Article) பத்தொன்பதை வாபஸ் பெற்றுக் கொண்டு இந்தியாவில் எமெர்ஜென்சி யை அறிவிக்கட்டும். ஏன், எல்லோரையும் முட்டாளாக்கி சுதந்திர இந்தியா என்று நம்ப வைக்க வேண்டும்?

எண்பதுகளிலேயே,மத்திய தணிக்கை குழு, மத்திய சான்றிதழ் குழு என சட்டப்படி மாறிவிட்டது.எல்லோரும் பார்க்கும் படம்(U), அல்லது பெற்றோர் வழிகாட்டுதலின் பேரில் குழந்தைகள் பார்க்கும் படம் ( UA ) அல்லது வயது வந்தோருக்கான படம் (A ) என்று சான்றிதழ் வழங்கும் வேலை மட்டும் தான் சான்றிதழ் குழுவிற்கானது.அந்நிலையில் கத்தரிக்கோலை வைத்துக் கொண்டு திரைப்படைப்பாளிகளை அதிகாரம் செய்ய, இவர்களுக்கு யார் உரிமை தந்தது.

என் கலையை மக்கள் மன்றத்தின் முன் வைக்க தடை செய்வது என் அடிப்படை உரிமையைப் பறிப்பது அன்றி வேறென்ன? மக்களின் அறியாமையை மூலதனமாக வைத்து அவர்களை சிந்திக்க விடாமல் மந்தையாக்கும் குப்பை சினிமா கலாசாரம் "தணிக்கை அதிகாரிகளால் பாராட்டு பெற்ற படம்" என்று ஆளுயுர கட் அவுட் விளம்பரம் வைக்கும் வணிகத்திற்கு மத்தியில் என் உரிமைக்கான குரல் ஒரு பைத்தியக்காரியின் குரலாக இந்த காயடிக்கப்பட்ட தமிழ்ச் சூழலில் பார்க்கப்படுகிறது.

24 மணி நேரமும், குறைந்தபட்சம் 200 தொலைகாட்சி சேனல்கள் ஒவ்வொரு வீட்டு வரவேற்பறைகளிலும் தணிக்கையில்லாமல் தான் ஓடுகின்றன. இதில் கட்சிக்கொரு ஊடகம் வேறு. இணைய வெளி எல்லோருக்கும் எதற்கும் திறந்தே கிடக்கின்றது. அரை மணி நேரத்திற்குள், ஒரு நூறு விளம்பரங்கள் நம்மீது ஏதோவொரு ஷேம்பூவையோ , சிவப்பழகு க்ரீமையோ , ஆணுறையையோ எறிந்து விட்டுப் போகின்றன. ரேடியோ, பத்திரிக்கை என்று எதிலும் தணிக்கை இல்லை. ஐம்பது ரூபாய் டிக்கெட் வாங்கி சினிமா பார்க்க வரும் பார்வையாளன் மட்டும் எப்படி அரசாங்கத்திற்கு முட்டாளாக தெரிகிறான்?

செங்கடலைத் தடை செய்ய மூன்று காரணங்களாம். ஒன்று - படம் நேரடியாக தமிழக இந்திய அரசாங்கங்களை விமர்சனம் செய்கிறது. இரண்டு - படம் இலங்கை அரசாங்கத்தின் செயல்பாட்டை விமர்சனம் செய்கிறது. மூன்று - நியதிக்கு புறம்பான ஆபாச மொழி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

படத்தில் பங்கேற்று நடித்த மீனவ, அகதி மக்கள் பயன்படுத்துவது வட்டார வழக்கு சொற்கள். இந்தியப் பாராளுமன்றத்தில் நமது உறுப்பினர்கள் பயன்படுத்தும் ஆபாச சொற்களை விட மீனவனின் மொழி மேலானதே! அப்படியென்றால் பாராளுமன்றத்தை தடை செய்வோமா? மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு தன் உறுப்பினர்களை நியமித்து தன் சொந்த மக்கள் பேசும் மொழியையே அவமானப்படுத்துகிறது. விக்டோரியா மகாராணி, அதிகாரத்தின் மன அமைப்புகளில் இன்னும் சாக வில்லை என்பதையே இது காட்டுகிறது.
இந்திய இலங்கை நாட்டு நட்புறவுகளை அப்பாவி மீனவர்களின் சடலங்களின் மீது நின்று அரசாங்கங்கள் பாதுகாக்க நினைத்தால், எப்படி மக்களும், கலைஞர்களும் எதிர்க்காமல், உயிரைக் கொடுத்துக் கொண்டிருக்க முடியும். அரசை விமர்சிக்க கூடாது என்று எந்த சட்டத்தில் எழுதியிருக்கின்றது?

ராஜபக்சேயும், மன்மோகன் சிங்கும், கருணாநிதியும், தங்கள் சொந்த மக்களைக் கொன்றார்கள். அரச பயங்கரவாதிகளுக்கு ஒரு கலைஞன் எப்படி பல்லக்கு தூக்க முடியும்.
ஒரு வேளை,செங்கடல் உதயநிதி ஸ்டாலின் அண்ட் கோ வழங்கும் படமாக இருந்திருத்தால் , அல்லது சன்பிக்சர்ஸ் பெருமையுடன் திரையிடும் படமாக இருந்திருத்தால், மீனவர்கள் கடலுக்குச் சென்று தாங்களே தற்கொலை செய்துக் கொள்கிறார்கள் என்று எடுத்திருப்பார்கள் , தடையேதும் இருந்திருக்காது. காட்சிப் பிழை போன்று இன்டலக்சுவல் திரைப்பட பத்திரிகை நடத்தும் மேதாவிகள் கூட சூட்டோடு சூடாக படத்தை மதித்து, அலசி, ஆராய்ந்து அதிகாரத்திற்கு , முதலாளிகளுக்கு தங்கள் அறிவைக் கப்பம் கட்டியிருப்பார்கள்.

ஆதிக்கங்களிலிருந்து நழுவுவதும், அவற்றைக் காட்டிக் கொடுப்பதும் தான் என்னைப் பொறுத்தவரை கலை. தணிக்கையில்லாமல் செங்கடலை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்வது வரை நடக்கும் என் போராட்டம். I know, it is a lonely fight.

தமிழ் நாட்டின் அறிவுத்துறையில் தொண்ணூறு சதவிகிதம் கேடு கேட்ட கும்பல். பிரதியைக் குறித்தல்லாமல் பிரதியாளரைக் குறித்துப் பேச்சைப் பெருக்கும் சாதீயப் புற்று நோய் பிடித்தவர்கள். அவர்கள் செங்கடலை மௌனித்து விடலாம் என நினைப்பது நடக்காது.ஏனெனில் செங்கடல் அவர்களுக்காக எடுக்கப்பட்டதல்ல.

ஒரு பார்ப்பனரல்லாத, முதல் தலைமுறை பட்டதாரி சிறுபான்மை இனப் பெண் அறிவுத்துறையில், கலைத்துறையில் பயிற்சி பெற்று எடுத்த தேவதைகள் என்ற ஆவணப்படம் மும்பை சர்வதேச திரைப்படப் பிரிவில் தங்கச் சங்கு அங்கீகாரத்தைப் பெற்றது தற்செயலானதல்ல.

எனக்கு என் நேர்மையிலும், மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிலும் இன்னும் நம்பிக்கை மிச்சமிருக்கிறது.