திடீரென்று, அடைமொழிகள் அதிலும் குறிப்பாகத் தமிழக அரசியலின் அடைமொழிக் கலாச்சாரம் தினமணிக்கு ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தினமணிக்கு ஏற்பட்டுள்ள வயிற்றுக் குமட்டல் அதன் தலையங்கத்தில் (04.08.2010) கொட்டிக் கிடக்கிறது.

பார்ப்பனியத்திற்கு எப்போதும் ஒரு ‘சிறப்புப் பண்பு’ உண்டு. எந்தவொன்றும் அதற்கு மட்டுமே ஏகபோக சொத்தாக, உரிமையாக இருக்கும் வரை அது புனிதத் தன்மையுடையது, தனித்தன்மையானது, தெய்வீகமானது, (மநு)நியாயமானது. அதுவே, காலச்சூழலினால் மற்றவர்களுக்கும் உரியதாகும் நிலை ஏற்படும்போது தேவையற்றதா(க்)கிவிடும், மதிப்பில்லாததா(க்)கிவிடும். அதுதான் பார்ப்பனியம்.

அப்படித்தான் அடைமொழிகள் அவாள்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தவரை, சொல்லச்சொல்ல இனித்தது. இப்போது அடுத்தவர்களுக்கும் அடைமொழிகள் கொடுக்கப்படுகின்ற மாற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அவர்களால்.

அடைமொழிகள் அர்த்தமில்லாதவையாம்!

அப்படியானால், ‘மகா பெரியவா’, ‘லோக குரு’, ‘ஜெகத் குரு’ போன்ற அடைமொழிகளும் கூட அர்த்தமில்லாதவைகள்தானே? முதலில் லோக குருவையும், ஜெகத் குருவையும் (அடைமொழிகளையாவது) தூக்கிவீசட்டும்.

இன்றும் அவர்கள் ராஜகோபாலச்சாரியாரைப் பற்றிப் பேசும் போதும், எழுதும்போதும் ‘சக்கரவர்த்தி’ ராஜகோபாலாச்சாரியார், ‘மூதறிஞர்’ ராஜாஜி என்றுதானே குறிப்பிடுகிறார்கள். சக்கரவர்த்தியும், மூதறிஞரும் தினமணிகளுக்கு அருவருப்பைத் தரவில்லையே? ஏன்?

மேலே சொன்னதுதான் காரணம். அவாளுக்கு என்றால் அமுதம் அடுத்தவர்களுக்கு என்றால் அசிங்கம்.

“பொதுவாழ்வில் ஈடுபட்டவர்களும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களும் தங்களைப் பெயர் சொல்லி அழைப்பது மரியாதைக் குறைவு என்று கருதும் திராவிடக் கலாச்சார எதிர்பார்ப்பு எந்த பகுத்தறிவுவாதத்தைச் சேர்ந்தது என்பதைப் பெரியாரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்கிறது தினமணி.

தன்னைவிட வயதில் சிறியவர்களையும், சிறு குழந்தைகளையும்கூட வாங்க, சொல்லுங்க என்று மரியாதையுடன் அழைத்தவர் தந்தைபெரியார் - இது திராவிடக் கலாச்சாரம்.

60 வயது முதியவர்களையும் 6 வயது மழலை, ‘அடே’ என்று முகத்தில் அறைந்தாற் போல பெயர் சொல்லி அழைக்க வைத்தது பார்பனியம். அழைப்பது மனைவியையா, மகளையா, சகோதரியையா, மூத்தவரையா, இளையவரையா என்று தெரிந்துகொள்ள முடியாதபடி விளிச் சொற்களைக் கொண்டது அவாளின் பேச்சுவழக்கு - இது ஆரியக் கலாச்சாரம்.

பகுத்தறிவுக்குப் பனியாக்களிடம் விளக்கம் கேட்கவேண்டிய நிலைமை இங்கே இல்லை.

ஒரு முழத் துண்டுத் துணியைக்கூட அடிமைத்தனத்தின் அடையாளமாக்கியது ஆரியம். அதை உடைத்தது திராவிட இயக்கம். அறிஞர் அண்ணா அவர்கள் தி.மு.க.வைத் தொடங்கியபோது அனைவரும் தோளில் துண்டு அணிந்து மேடையில் தோன்றினர். அதிலும் அண்ணா அவர்கள் அணிந்திருக்கும் துண்டு தரையில் புரளும். பிறகு கழகத் தோழர்களைத் ‘துண்டுக்காரன்’ என்று கேலிபேசினர். காரணம் அவாளின் கழுத்தை மட்டுமே சுற்றியிருந்த அங்கவஸ்திரம், அனைவரின் தோளிலும் துண்டாக ஆடியதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை அவர்களால்.

சென்னை வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வை இங்கே சொல்வது மிகப்பொருத்தமானதாக இருக்கும். அக்கூட்டத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அதாவது ‘இனிமேல் வழக்காடத் தொடங்கும் போது நீதிபதிகளைப் பார்த்து என் பிரபுவே என்று பொருள்படும்படியாக, மை லார்டு என்று அழைக்க வேண்டியதில்லை. அது ஆங்கிலேயன் காலத்தில் கொண்டுவரப்பட்டது. எனவே இனிமேல் நீதிபதிகளைப் பார்த்து சார் என்று அழைத்தாலே போதும்’ என்றொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அனைவரும் அதனை ஏற்றுக்கொள்கின்றனர். அப்போது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர் அருள்மொழி எழுந்து, “ஒரு சின்ன திருத்தம். மை லார்டு என்று அழைப்பதை உடனே நிறுத்த வேண்டாம். இன்னும் கொஞ்ச காலத்திற்கு நீதிபதிகளை மை லார்டு என்றே அழைக்கலாம்” என்று சொல்ல, அதைக் கேட்ட மற்றவர்கள் ஆச்சரியத்துடன், “சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த நீங்கள் எப்படி அந்த அடிமை முறை தொடரவேண்டும் என்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் சொன்ன விடை பார்ப்பனீய சூழ்ச்சியின் உச்சத்தைத் தொட்டுக்காட்டியது. “வேறொன்றுமில்லை, விடுதலைக்கு முன்பு ஆங்கிலேயர்கள் மட்டுமே நீதிபதிகளாக இருந்தார்கள். அப்போது அவர்களை ‘மை லார்டு’ என்று வழக்கறிஞர்கள் அழைத்தனர். அதற்குப்பிறகு ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு வகுப்பினர் மட்டுமே நீதிபதிகளாக இருந்துவந்தனர். அவர்களையும் ‘மை லார்டு’ என்று அழைத்தோம். அப்போதெல்லாம் உறுத்தாத அடிமைத்தனம், பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் நீதிபதிகள் ஆகியுள்ள இக்காலத்தில் மட்டும் ஏன் உறுத்துகிறது? இந்த நீதிபதிகளையும், சிலகாலம் ‘மை லார்டு’ என்று அழைக்கலாம். தங்களை மேல்சாதியினர் என்று கருதிக் கொண்டிருக்கும் வழக்குரைஞர்கள், வெள்ளைக்காரர்களை மை லார்டு என்று அழைத்த நாவால், நம்மவர்களையும் சில காலம் அழைக்கட்டுமே!” என்று விளக்கமாக விடைசொன்னபோது, மெல்ல மெல்லக் கரவொலி, கூட்ட அரங்கை நிறைத்தது.

பார்ப்பன விசமம் எப்படியயல்லாம் விளையாடுகிறது பார்த்தீர்களா?

அப்படித்தான் சூத்திரத் தலைவர்கள் அடைமொழிகளோடு அழைக்கப்படுவதைக் கண்டு குமுறியிருக்கிறது தினமணி. நம்முடைய முதல்வர் அவர்கள் ‘கலைஞர்’ என்று அழைக்கப்படுவது கட்டாயத்தினால் அல்ல, கலைத் துறையிலும், சமுதாயத்திலும் அவருடைய எழுதுகோல் ஏற்படுத்திய மாற்றங்களுக்காக, சுயமரியாதைமிக்க ஒரு சக கலைஞனால் வழங்கப்பட்டதுதான் கலைஞர் என்னும் அடைமொழியே தவிர, வலியப்போய் ஒட்டிக்கொண்டு வந்த புரட்சிப்பட்டமல்ல.

தன்னுடைய மாணாக்கர்களேயானாலும், அண்ணாவையும், கலைஞரையும் அவர்கள் வகித்த பதவிக்கு மதிப்புக் கொடுத்து, நமது முதலமைச்சர் அண்ணா என்றும், கலைஞர் என்றும் மரியாதையோடு அழைத்தவர் தந்தை பெரியார். மறைந்த அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். அவர்கள் எந்த இடத்திலும் எப்போதும் கலைஞரை பெயர் சொல்லி அழைத்ததில்லை. கலைஞர் என்றுதான் குறிப்பிடுவார். இன்று இருக்கும் தலைமை, அ.தி.மு.க. தலைமை மட்டுமல்ல பார்ப்பனீயத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி. அங்கிருந்து சுயமரியாதையை எதிர்பார்க்க முடியாது.

மனிதர்களையே மதிக்கத் தெரியாதவர்களுக்கு, மக்கள் கொடுத்த பதவியை மதிக்கத் தெரியாததில் வியப்பில்லைதான்.

கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ்


சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே...

'சுப்பிரமணி'யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்!

கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். 'பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி' என்பார் இயக்குநர் மணிவண்ணன்!

பாரதிராஜாதான் 'கவுண்டமணி' எனப் பெயர் மாற்றினார். '16 வயதினிலே'தான் அறிமுகப் படம்!

அம்மாவை 'ஆத்தா' என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!

கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது 'மிஸ்டர் பெல்' என்று. கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்துத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்!

மிகப் பிரபலமான கவுண்டமணி - செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!

இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.

கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு. எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட 'சரி' என்பார். 'இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!' என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்-கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்!

உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு. 'பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா' என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!

திருப்பதி ஏழுமலையான்தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம். நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைத்திருக்கிறார் கவுண்டர்!

சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!

கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!

புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது. தனிமை விரும்பி!

ஓஷோவின் புத்தகங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து, நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசும் செய்வார்!

கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!

கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. 'என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!' என்பார்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு!

ஷ¨ட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போதுதான்!

கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். 'நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது... ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்' என்பார்!

எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது!

டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார். 'மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்திரிப்பது ஏமாற்றுவேலை' என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்!

கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் 'ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்' 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'நடிகன்'. 'அட... என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு' என சுய எள்ளலும் செய்துகொள்வார்!

'மறக்க வேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை' என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!

சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டர். அப்போது மருத்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்!

ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!